Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | பொய் முகங்கள் |பா.உதயன்

கவிதை | பொய் முகங்கள் |பா.உதயன்

2 minutes read

எத்தனை
பொய் முகங்களை
என் எதிரே
பார்த்திருக்கேன்

நானே வியந்தபடி
இவனா இப்படி
என்று ஏங்கியிருக்கேன்

கவிஞன் என்று
ஒருத்தன் வந்தான்
பல கதைகள்
சொல்லித் திரிந்தான்

எப்பவுமே தன் மூச்சு
விடுதலை என்றான்
இப்ப இவன் இருக்கும்
இடம் வேறு

பொய் அழகே
இவனுக்கும்
கவிதைக்கும் என்று
புரிந்து கொண்டேன் இன்று

அரசியல் ஆய்வாளன்
என்று ஒருவன் வந்தான்
அண்ணன் அவன் சொல்வது
தான் தத்துவம் என்றான்

எப்பவுமே தான்
தேசியவாதி என்றான்
இப்ப இவன்
இருக்கும் இடம் வேறு

ஏங்கிப்போய் விட்டேன்
இவன் பேச்சை
இன்று கேட்டு

சோஷலிசவாதி என்று
ஒருவன் இருந்தான்
சொலிடாரிட்டி என்று
பல கதைகள் சொன்னான்

சரிநிகரும் சமத்துவமும்
என்று பல சொன்னான்
சாதி மதம் பாவம்
என்றும் சொன்னான்

இப்ப இவன்
இருக்கும் இடம் வேறு
ஏங்கிப் போய் விட்டேன்
இவனை ஒருக்காக் கண்டு
எத்தனையோ கோடிக்கு
தான் அதிபதி என்றான்

இந்த மண் மீட்க
என்று ஒருவன் வந்தான்
உயிர் தமிழுக்கு
உடல் மண்ணுக்கு என்றான்
அத்தனையும் பொய்யெனப் போலே
ஆக்கிரமிப்பாளருக்கு உதவி
அபிவிருத்தி அமைச்சராகிப் போனான்

நல்லாட்சி என்று
ஒருவன் வந்தான்
நம்மில் ஒருவன்
துணையாகி நின்றான்

இப்ப வரும் தீர்வு
என்றும் சொன்னான்
ஏமாந்து போனார்
எமது மக்கள்

ஜனநாயகம் பேசி
ஒருத்தன் திரிந்தான்
இப்போ பணநாயகம்
ஆகிப் போனான் இன்று

உதவும் கரம் என்று
ஒருத்தன் இருந்தான்
ஊர் முழுக்க
காசு சேர்த்துத் திரிந்தான்

பாவம் அந்த
மக்கள் என்று சொல்லி
பல உதவி
செய்வதாக சொன்னான்

போகும் இடம் எல்லாம்
மாலை விழும்
இவன் கழுத்தில்
ஏதோ மீட்க
வந்த தேவன்
இவன் போலே

இப்ப இவன்
இருக்கும் இடம் வேறு
இரண்டு மாடி வீடு
கொடுத்தது எல்லாம் சுருட்டி
கொள்ளைகாரன் போல
ஏங்கிப் போனேன் கண்டு

சாதி எதிர்ப்பாளன்
சக்கரப்பிள்ளைவாள்
என்று ஒருவன் வந்தான்
நீதி கெட்ட சமூகம்
என்று சொன்னான்

இப்ப இவர் சொல்லும்
கதை வேறு
கடைசி மகள் ஒருத்தி
காதலித்தாள் தலித்தை என்று
வீட்டை விட்டுக் கலைத்துப்போட்டார்

மிச்சம் மூன்று பிள்ளைக்கும்
முடிச்சு வைக்க நாய் போல் அலைகிறார்
நான்கு பிள்ளைகளின் தந்தை
நல்ல சாதி கேட்டு

எந்த இலக்கிய சந்திப்பிலும்
இவரை இப்போ காணம்
ஏங்கிப் போய் விட்டேன்
எங்கள் பிள்ளைவாளா
இவர் என்று

எழுத்தாளன் என்று
ஒருத்தன் இருந்தான்
ஏதோ பல
எழுதி எழுதி வந்தான்

எல்லாமே
தெரிந்தவன் போலே
எழுத்தினிலே வித்தகன்போல்
தத்துவங்கள் சொன்னான்

ஆண்டுக்கு
ஒரு புத்தகங்கள் அடிப்பார்
பேருக்கும் புகழுக்கும் என்றே
பெரிசாய் பல விளம்பரங்கள்
செய்வார்

புவிசார் அரசியல் ஞானி
என்று ஒருவர் இருந்தார்
தன்னை விட ஒரு ஞானி இல்லையென
தத்துவங்கள் பல எழுதி வந்தார்

நடந்தது நடப்பது நடக்கப் போவதென
நாளொரு செய்தி சொன்னார்
ஆன நடந்தது ஒன்றும் இல்லை
இவர் இப்போ நடப்பதும் இல்லை

அரசியல் அறிவோம்
என்று ஒருவர் வந்தார்
அடிக்கடி கருத்தரங்கு வைத்தார்

அவன் பிழை
இவன் பிழை என்பார்
அதனால் தான்
நாம் தோற்றோம் என்பார்

அறிவதற்கோ
அங்கு ஒன்றும் இல்லை
அவரிடமும் விடை
ஒன்றும் இல்லை

சொலிடாரிட்டி
சோசலிசம் என்பார்
ஆனால் அவரிடமும்
அது ஒன்றும் இல்லை

எத்தனையோ
வேஷங்கள்
பாத்திரங்கள்
நூல் கொண்டு ஆடும்
பொம்மை போலே
நாளுக்கு ஒரு நாடகங்கள்

பேருக்காய் வாழ்ந்தான்
ஒருத்தன்
புகளுக்காய் வாழ்ந்தான்
ஒருத்தன்
பணத்துக்காய் வாழ்ந்தான்
ஒருத்தன்
பதவிக்காய் வாழ்ந்தான்
ஒருத்தன்

உண்மையாய் ஒருத்தன் வாழ்ந்தான்
உயிரையே எறிந்து சென்றான்
தன்னையே தமிழுக்காய் தந்தான்
அவன் தான் மனிதன் அவன் ஒரு வரலாறு.

பா.உதயன் ✍️

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More