பசி பட்டினி பொருளாதாரத் தடை
பெரும் போர் இழப்பு
இதுவெல்லாம் புதிதல்ல
ஈழத் தமிழருக்கு
அதுவெல்லாம் கடந்து தான்
நடந்து வந்தான்
ஆனால் இவை எல்லாம்
உங்களுக்கு புதிது தான்
அன்று ஒரு நாள்
அருகில் ஒரு தமிழ்க் குழந்தை
பசி எடுத்து அழுத குரலும்
கேட்கவில்லை
பிள்ளைகளை தொலைத்து விட்டு
பெரும் குரலாய்
காடதிரக் கத்திய தாயின்
கண்ணீரில் எழுதிய
கதை ஒன்றும்
உங்கள் காதுகளில்
கேட்கவில்லை
எதுகுமே கேட்கவில்லை
ஈரமனம் எவருக்குமாய்
இருந்ததாய் தெரியவில்லை
அன்பும் அறமும்
தர்மமும் கொண்ட அந்த தம்மபத
புத்தனின் சிந்தனையும்
உங்களுக்கு புரிந்ததாய்
தெரியவில்லை
கோபமும் கொலையுமாய்
நல்லறிவை தொலைத்து விட்டு
ஏதேதோ சூழ்ச்சி பண்ணி
எங்களை வீழ்த்தி விட்டு
துட்டகைமுனு கொண்டு வந்த
யுத்தவெற்றி ஒன்று தான்
நித்தம் உங்கள் தெருக்களிலே
நீங்கள் பாடியது நினைவிருக்கா
இனி ஒரு விதி செய்வோம்
எல்லா இனமும் சமம் என்போம்
இருளை கடந்து செல்வோம்
தனி ஒருவனுக்கு
உணவும் உரிமையும் இல்லையெனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்.
பா.உதயன்