மர அணிலும்
காட்டுக் கோழியுமான
நாமிருவரும்,
நீல அல்லிகள் பூக்கும்
கனவொன்றைத்தான்,
சூரியன் மறையும்
பின்மாலையொன்றில்,
காலிமுகக் கரையில் நாட்டினோம்!
முதுகில் மூன்று கோடும்,
அடர்வால் முடியும்,
கூர் நகமும், முன்பல்லும்,
வெளிர் நிறச் சாம்பலும் பூண்ட
மர அணில்களாகிய நாம்,
தீயில் வடித்த எழுத்துகளைக்
காற்றின் வாயிலே ஊட்டினோம்.
‘பிழைபடும் மனுஷனின்
அதிகாரக் கால்கள் நொறுங்குவதாக,
பசித்திருப்போரின் நெருப்பு மூண்டெரிவதாக,
இன்னும்…
வயிறொட்டும் படியாக,
பிறர் உணவைத் தின்றோர் கூரைகள்
தீயின் வாய்க்கு இரைபடுவதாக’
எனும் சுவிஷேசத்தை,
காற்றுரைத்துச் சென்றாயிற்று.
செம்மஞ்சள் மேவு செவ்வுடலும்
அப்பிய ஊதாச் சிறகுகளும்
பொன்னிறக் கழுத்தும்
வெளிறிய செவ் முகமும்
உச்சிக் கொண்டையும் சூடிய
காட்டுக் கோழிகளாகிய நாம்
சூரியப் பிழம்பைப் புரட்சி மையாக்கி
அலைநுரையின் நாவில் பருக்கினோம்.
‘சிங்கத்தின் வாலில் தொங்கும் மதுப் போத்தல்களாகி,
கூரிய அதன் பற்களிடை
பணத் தாள்களாகி,
கால்களில் கத்திகளும் கம்புகளுமாகி,
ஆசனத்தை இழந்தோன்,
நூறாயிர யோனியிலும் நாயாகவும்
இன்னும்…
நடுச்சமுத்திரத்திலும்
நக்குத் தண்ணிதானும் அவனுக்கெட்டாது’
எனும் சுவிஷேசத்தை
அலை உரைத்துச் சென்றாயிற்று.
எல்லாமே முடிந்தது!
ஆயினுமென்?
‘ஆமென்’ சொல வாய் திறந்தோம்.
அதற்குள்…
நாய்க் குடும்ப இனத்தோன்றியான
அனைத்துண்ணியும்,
நாய் தின்னாது விட்டதைத் தின்பதும்,
வாய்ப்பு வளைகளில் வசிப்பதால்
குழி நரியுமான குள்ள நரி,
தாமரை மொட்டேந்தி,
பச்சை யானையாகி,
கதிரைக் கால் பற்றி
‘ஆதிமூலமே’ என
ஊளையிட்டதாயின்…
இயற்கையின் கையிலும்
ஈர நிலத்திலும் பூப்பதும்,
ஒழுக்கத்தின் சிரிப்பும்,
சித்தார்த்தரின் பாத நற்குறியுமான
நீல அல்லியோடு…
கார்த்திகையில் முகிழ்ப்பதும்,
விரிவின் நிமிர்கையில் விரல் நீட்டுவதும்,
இதழ்களில் சுடர்வதும்,
மஞ்சளும் சிவப்புமான,
செங்காந்தள் ஒன்றையும்
சேர்ந்தே நாட்டுவோம்!
அப்போது,
காற்றின் தீப்பந்தாய்க் கனலும்
விடுதலைத் தீயில்,
காலிக் கடலின் கரையில்,
உனதும் எனதுமான
குருதியில்,
நீல அல்லியும்
செங்காந்தளும்
ஒன்றாய்ச் சிரிக்கட்டுமே!
…………………………………..
செ.சுதர்சன் 13/05/2022