Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வாழ்வு… | செ.சுதர்சன்

வாழ்வு… | செ.சுதர்சன்

1 minutes read

தொட்டியில் மீன்கள்
‘நீந்திக் கொண்டிருக்கின்றன’ என்றும்
வானத்தில்
‘பறவைகள் பறந்துகொண்டிருக்கின்றன’ என்றும்
எப்படிச் சொல்கிறார்கள்?

தரையில் இருக்கவேண்டியவன்,
நீந்துகிறான் எனிலோ
பறக்கிறான் எனிலோ
அவனை
நீந்துகிறான்
பறக்கிறான்
என்றுதானே சொல்ல வேண்டும்!

அவனது இருப்போ
நீரிலோ வானத்திலோ இல்லாதது!
ஆயினும்
நீரையும் வானத்தையும்
ஆளத்தொடங்கினான்!
அப்போதுதான்,
அவனது நாக்கு
அதிகாரச் சொற்களின்
விளைநிலமாயிற்று!

மீனோ பறவையோ
அவனது இருப்பைப்
பற்றிக் கொண்டதா?
இல்லவே இல்லையே…!

ஒரு மீன்
அவனது கூரையைப் பிரித்து
குடிசையிலே இருந்து
கூப்பாடு போட்டுள்ளதா?
ஒரு பறவை
அவனது விமானத்தில்
கூடு கட்டிப் பயணம் செய்துள்ளதா?

எப்படிச் சொன்னான்…
தான் நீந்துவதை – அது நீந்துகிறது
என்றும்
தான் பறப்பதை – அது பறக்கிறது
என்றும்

நீந்துவது மீனுக்கும்
பறப்பது பறவைக்கும்
வாழ்வு அன்றோ…!
அதன் அதன் வாழ்வை
அது அது வாழ்கிறது!

தரையில் வாழ்பனுக்கு மட்டுமா வாழ்வு
என்று கேட்டேன்…

அகராதிகள் தீப்பிடித்துக்கொண்டன!

செ.சுதர்சன் 17/07/2022

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More