Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தொடரும் மாரடைப்பை தற்காப்பது எப்படி?

தொடரும் மாரடைப்பை தற்காப்பது எப்படி?

4 minutes read

சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார், விவேக் என நம்மைவிட்டு மாரடைப்பால் பிரிந்து சென்ற பிரபலங்கள் சிலருண்டு.  இது ஏதோ நடிகர்களுக்கும், பெரிய பெரிய செல்வந்தர்களுக்கும் மட்டும் வரக்கூடிய ஒன்றல்ல. நம்மில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதிலும் இந்த நவீன யுகத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் மிக இளம் வயதினரையும் தாக்கும் ஒன்றாக இப்போது மாரடைப்பு மாறியுள்ளது.

இருதய அடைப்பு, மாரடைப்பு, heart attack, cardiac arrest, இருதய செயலிழப்பு என பல்வேறு பெயர்களில் இன்றைக்கு அழைக்கப்படும் இந்த மாரடைப்பு பிரச்சனையைப் பற்றி, நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது என்பதால் அதனைப் பற்றி இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.மாரடைப்பு என்பது…?

நம் உடம்பில் எந்த ஒரு திசுவாக இருந்தாலும் அதற்கு ரத்த ஓட்டம் அவசியம் தேவை. இல்லையெனில் திசுக்கள் சேதம் அடைந்து இறந்து போகும். அப்படி எந்த பகுதியில் திசுக்கள் இறக்கிறதோ அதற்கு ஏற்றார்போல பாதிப்புகள் இருக்கும். உதாரணமாக, கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதித்து, திசுக்கள் இறந்துபோனால், கால்கள் கருப்பாகி, அழுகத் தொடங்கி
அழிந்துவிடும். பின், அறுவை சிகிச்சை செய்தே அக்கால்களை அகற்றவேண்டிய சூழல் உண்டாகும்.

இதேபோலத்தான் இருதயமும். இருதய திசுக்கள் ரத்த ஓட்டம் இல்லாமல் இறந்து போனால், இருதயம் செயலிழந்து நின்றுவிடும். இருதயம்தான் நம் உடலின் மிக முக்கிய உறுப்பு என்பதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

தரவுகள் சொல்வதென்ன…?

*உலகளவில் பதினேழு மில்லியன் மக்கள் இருதய நோயால் இறக்கின்றனர்.
*ஆண்கள் இறப்பதற்கான முதல் காரணமாக இருதய நோய்கள் இருக்கின்றன.
*ஆறு மரணத்தில் ஒரு மரணம் இருதய அடைப்பால் நிகழ்கிறது.
*சராசரியாக உலக அளவில் ஒரு நிமிடத்திற்கு ஒருவர் இருதய அடைப்பால் இறக்கின்றனர்.

காரணங்கள் அறிவோம்…

*ரத்தக் குழாயின் உட்புறத்தில் கொழுப்பு, கால்சியம் போன்றவை படியக் கூடும். இதனால் சீரான ரத்த ஓட்டம் இல்லாமல் குறைந்து போகும்.
*இதே கொழுப்பு, கால்சியம் ஒரு நாள் வெடித்து சிறு சிறு துண்டுகளாக ரத்த ஓட்டத்தில் மீண்டும் சென்று ரத்த ஓட்டத்தை பாதிக்கும்.
*ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்து துண்டுகளாக ரத்த ஓட்டத்தில் சுற்றும். இது எங்கேனும் அடைத்து பாதிப்பு விளைவிக்கும்.

இப்படி இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய் மட்டுமல்லாமல் இருதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாயும் பாதிக்கும். அவ்வாறு ஆகும்போது இரண்டுக்கு மேற்பட்ட குழாய்களில் அடைத்திருந்தால் இருதய செயலிழப்பு நடந்து மரணம் உண்டாகும்.

ஆபத்துக் காரணிகள்…

*அதிக மன அழுத்தம் (Stress).
*நீண்ட கால மனச் சோர்வு (depression).
*அதிக துரித உணவு உண்பது.
*பதப்படுத்தப்பட்ட உணவுகள் எடுத்துக் கொள்வது.
*அதிக கொழுப்பு நிறைந்த இறைச்சிகளை அடிக்கடி உண்பது.
*இனிப்பு வகைகள் அதிகமாக உண்பது.
*தொடர்ந்து நான்கு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது.
*தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது.
*குழந்தைப் பருவம் முதலே உடல் எடை அதிகமாக இருப்பது.
*புகைப் பிடிப்பது.
*அளவின்றி மது அருந்துவது.
*உடல் எடை கணக்கு (BMI) 30-க்கு மேல் போவது. (அதாவது நம் உயரத்திற்கு ஏற்ப எடையை கண்டறிவதே BMI. இது 19 முதல் 25க்குள் தான் இருக்க வேண்டும்.)
*ரத்த அழுத்தம்.
*சர்க்கரை நோய்.
*ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு மற்றும் வேறு இருதயப் பிரச்சினைகளுக்கு சரிவரத் தொடர்ந்து மாத்திரை மருந்து எடுத்துக் கொள்ளாமல் இருப்பது.
*இயன்முறை மருத்துவரின் சரியான ஆலோசனை இல்லாமல் யூட்யூப், டிவி பார்த்து உடற்பயிற்சி செய்வது.
*பாடி பில்டிங் செய்வதற்காக அதிகப்படியான ஸ்டீராய்டு சார்ந்த மருந்துகளை மருத்துவரின், உணவியல் நிபுணரின் ஆலோசனை இல்லாமல் உட்கொள்வது.
*அதிக எண்ணெய் பண்டங்கள் உண்பது.
*தூங்கும் முறையையும், நேரத்தையும்  சரியாகக் கடைப்பிடிக்காமல் போவது.
*பெண்கள் அதிகப்படியானக் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது.

அறிகுறிகள் தோன்றினால்…

நெஞ்சு வலி தோன்றினால் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லவேண்டும். ‘உடனடி சிகிச்சைகள்’ செய்வதன் மூலம் இருதயத்தை தற்சமயம் வேலை செய்ய வைக்கமுடியும். பின் ரத்த பரிசோதனை, இருதயம் சார்ந்த பரிசோதனைகள் மூலம் காரணங்கள் கண்டறிந்து அவற்றை சரி செய்வார்கள் மருத்துவர்கள்.

தீர்வுகள்…

*தேவைப்பட்டால் ரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவர்.
*மேலும் இரண்டு ரத்தக் குழாய்களை இணைத்து மாற்று வழி அமைப்பர். இதனால் ரத்தம் சீராய் ஓடக் கூடும்.

இயன்முறை மருத்துவம்…

*அறுவை சிகிச்சை முடிந்த பின்பு இயன்முறை மருத்துவர் லேசான உடற்பயிற்சிகள் மூலம் மீண்டும் நடப்பதற்கு, படிகள் ஏறி இறங்குவதற்கு என முன்பு இருந்த சூழலுக்கு தயார் செய்வார்.
*(மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு,) ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உடற்பயிற்சிகள் பொருத்தமானதாக இருக்கும். அதனால் இயன்முறை மருத்துவரை வரவழைத்து, அவர் மூலமாக கற்றுத் தரும் உடற்பயிற்சிகள் சிறந்தது.

வராமல் தடுக்க…

*சத்தான உணவுப் பொருட்களான காய்கள், கனிகள், உலர் பருப்புகள், கீரை வகைகள் முதலியனவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*அதிக முறை துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.

*தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும், இயன்முறை மருத்துவரின் போதிய ஆலோசனை மூலம் தகுந்த பயிற்சிகளை தகுந்த முறையில் செய்வது நல்லது.

*முப்பது வயதிற்கு மேல் உள்ள நபர்கள் வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

*ஐம்பது வயதிற்கும் மேற்பட்டவர்கள் அவ்வப்போது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு ஆகியவைகளை கண்காணிக்க வேண்டும்.

*உடற்பயிற்சி செய்து, கட்டுமஸ்தான உடல் வைத்திருக்கும் நபர்களும் மேல் சொன்னவாறு ஆரோக்கிய பரிசோதனைகள் செய்ய வேண்டியது அவசியம்.

*மது, புகையிலை அளவில்லாமல் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

*உடல் எடையை அவ்வப்போது கவனித்து தக்க உடற்பயிற்சிகள் செய்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

*இளம் பருவமாக இருந்தாலும் சரியான தூங்கும் நேரத்தை பின்பற்ற வேண்டும்.

எனவே, மாரடைப்பு வராமல் வருமுன் காப்பதும், இருதயம் தொடர்பான விழிப்புணர்வு பெற்று அதன் வழி நடப்பதும் அதிகப்படியான பாதிப்புகளை தவிர்த்து, இன்பமுடன் வாழ வழி செய்யும் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனத்தில் பதியவைக்க வேண்டியது மிக முக்கியம்.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More