பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதன், 25வது ஆண்டு விழாவை, ஜெர்மானிய மக்கள் நேற்று விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கான நிகழ்ச்சியில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட, லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என, இரண்டாக பிரிந்திருந்த ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில், 25 ஆண்டுகளுக்கு முன், 15 கி.மீ., நீளச் சுவர் இருந்தது.
தப்பி ஓடுவதை தடுக்க:கம்யூனிச கொள்கைகள் பின்பற்றப்பட்ட கிழக்கு ஜெர்மனியின் அடக்குமுறைகளுக்கு பயந்த அந்நாட்டு மக்கள், ஜனநாயக கொள்கைகள் பின்பற்றப்பட்ட, அண்டை நாடான மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓடுவதை தடுக்கும் வகையில், 1961ல், 155 கி.மீ., நீளத்திற்கு சுவர் எழுப்பப்பட்டது.
இதில், தலைநகர் பெர்லினில் இருந்த, 15 கி.மீ., சுவர், 1989, நவம்பர் 9ல் தகர்க்கப்பட்டது; அதன் பின், இரு நாடுகளும் ஒன்றாக இணைந்தன.
பெர்லின் சுவர் தகர்ப்பின், 25வது ஆண்டு விழா நேற்று பெர்லினில் விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு, ஜெர்மனி நாட்டின் பெண் அதிபர், ஏஞ்சலா மெர்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டு, இந்த நாளை அனைத்து ஜெர்மானியர்களும் விமரிசையாக கொண்டாட வேண்டும் என, வலியுறுத்தி இருந்தார்.
அதன் படி, கலைநிகழ்ச்சிகள், வரலாற்று தகவல்கள் அடங்கிய கண்காட்சிகள், சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிபர் ஏஞ்சலா மெர்கல், பொதுமக்களுடன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நாளை கொண்டாடும் விதத்தில், வண்ண பலுான்கள் பறக்கவிடப்பட்டன.