யோகாவால் நிறைய பலன்கள் உள்ளன. அதனால், ஜூன், 21ம் தேதியை, சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும்’ என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் யோசனைக்கும், இதுதொடர்பாக, ஐ.நா.,வில் கொண்டு வரப்பட்ட வரைவு தீர்மானத்திற்கும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. 130க்கும் மேற்பட்ட நாடுகள், தீர்மானத்தை ஆதரித்துள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில், செப்டம்பர் மாதம் உரை நிகழ்த்திய, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மனது மற்றும் உடல், எண்ணம் மற்றும் செயல், ஆசை மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றை ஒன்று சேர வைக்கும் சக்தி யோகாவுக்கு உள்ளது. மனிதன் மற்றும் இயற்கை இடையே இணக்கத்தையும் ஏற்படுத்தும். உடல் நலத்தை பேணிக்காக்கவும் யோகா உதவுகிறது. எனவே, அத்தகைய யோகாவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உலக நாடுகள் எல்லாம், சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.
இதையடுத்து, யோகாவின் பலன்களை அங்கீகரிக்கும் வகையில், இந்தியா தலைமையில், ஐ.நா., பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட வரைவு தீர்மானத்திற்கு, 130க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த மாதம், ஐ.நா., சபையில், இந்திய தூதரகம் சார்பில், இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்ற போது, இந்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ‘எல் ஆவணம்’ என, அழைக்கப்படும், யோகா தொடர்பான தீர்மானத்திற்கு, 130க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், டிசம்பர், 10ம் தேதி, ஐ.நா., சபையில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும். அப்படி நிறைவேறினால், ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படும்.