உலகளாவிய சிந்தனையாளர்கள் பட்டியலில் உலகளவில் 100 பேரில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தைப் பெற்றுள்ளளார். அவரைத் தொடர்ந்து, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், பா.ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு கொள்கை என்ற ஒரு பத்திரிகை இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், 64 வயதாகும் மோடி, வசீகரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கு சாதகமாக செயல்படும் தலைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது கவர்ச்சிகரமான பிரசாரத்தை மோடி வெளிப்படுத்தினார். பா.ஜனதா கட்சி உத்தரபிரதேசத்தில் ஆணித்தரமாக காலூன்ற அமித் ஷா பிரச்சார இயந்திரமாக செயல்பட்டார். இதனால் அவரது பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் கடன் தொடர்பான கடுமையான உண்மைகளை தெரிவித்ததற்காக பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியாவின் பெயரும் இப்பட்டியலில் உள்ளது.
மேலும், இதில் இந்திய தேசிய போலியோபிளஸ் குழு சேர்மன் தீபக் கபூர், கேம்பிரிட்ஜ் மருத்துவர் சங்கீதா பாடியா, சுற்றுச்சூழல் விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன், பொருளாதார நிபுணர் பார்த்தா தாஸ்குப்தா ஆகிய இந்தியர்களின் பெயரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.