திருச்சி சிறையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 7 பேர் திடீர் மயக்கமடைந்ததால்அவர்களுக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் முகாம் சிறை உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் மற்றும் மலேசிய தமிழர்கள் என 31 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.இதில் இலங்கை தமிழர்கள் 26 பேர் தங்களை முகாமில் இருந்து விடுவிக்க கோரியும் வழக்குளை சட்டப்படி வெளியில் இருந்து நடத்தி கொள்வதாக கூறியும் கடந்த 15–ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்களான உமாரமணன், பாபு, முகிலன், தயா ஆகியோரை போலீசார் நாகப்பட்டினம் கோர்ட்டுக்கு நேற்று அழைத்து செல்ல முயன்றனர்.அப்போது அவர்கள் 4 பேரும் செல்ல மறுத்து விட்டனர்.இதை தொடர்ந்து கியூ பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணன், துணை கலெக்டர் நடராஜன் மாநகர போலீஸ் கமிஷனர் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தயாவை தவிர மற்ற 3 பேரும் கோர்ட்டுக்கு செல்ல சம்மதித்தனர்.
இதற்கிடையே உண்ணாவிரதம் இருந்த ஈழநேரு, விக்னேஸ்வரன், தயா, ஜெயன், சந்திரகுமார் ஆகிய 5 பேரும் தூக்க மாத்திரையை சாப்பிட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் உண்ணாவிரதத்தை அவர்கள் தொடர்ந்தனர்.
இந்த நிலையில் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டதாலும் தொடர்ந்து 5–வது நாளாக உண்ணாவி ரதம் இருந்ததாலும் மயக்கம் அடைந்த ஜெயன், சந்திரகுமார், ரமேஷ், விக்னேஸ்வரன், தயா, மகேஷ்வரன், ஈழநேரு ஆகிய 7 பேரும் இன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 19 இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.