ஈரானில் இயங்கி வரும் அணு உலைகளில் அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக குற்றம் சாட்டிவரும் மேற்கத்திய நாடுகள், அந்த நாட்டின் அணு திட்டங்களை கணிசமாக குறைக்க முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால் தங்கள் உள்நாட்டு அணுசக்தி திட்டங்களை கைவிட முடியாது என ஈரான் வலியுறுத்தி வருகிறது. மேலும் ஈரானின் அணு உலைகளை பார்வையிட ஐ.நா. அதிகாரிகளுக்கு அனுமதியும் மறுத்து வந்தது.
இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் இடையே வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில் ஈரானின் மாரிவனில் அமைந்துள்ள அணு உலையை ஐ.நா.வின் அணுசக்தி ஆய்வாளர்கள் பார்வையிட அனுமதிக்க அந்த நாடு முடிவு செய்துள்ளது. ஈராக் எல்லையோரம் அமைந்துள்ள இந்த அணு உலையில், ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கக்கூடும் என சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஈரான் அணுசக்தி நிறுவன செய்தி தொடர்பாளர் பெரோஸ் கமல்வாண்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அணுசக்தி திட்டங்களை ஈரான் அமைதி வழியிலேயே பயன்படுத்துகிறது என்பதை நிரூபிப்பதற்காக, மாரிவன் அணு உலையை ஐ.நா. அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று கூறினார்.