அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் நகரில் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பின இளைஞரை போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் சுட்டுக்கொன்ற வழக்கில் அவர் மீது தவறில்லை என ஜூரிகள் தெரிவித்ததையடுத்து அங்கு பெருத்த கலவரம் மூண்டது.
பிரவுன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ஜூரிகள் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவடைந்து அமெரிக்க நேரப்படி இரவு 8.30 மணியளவில் ஜூரிகள் தங்களது தீர்ப்பை வழங்கினர். அதில் பிரவுனை சுட்டுக்கொன்றது தொடர்பாக வில்சன் தவறுசெய்யவில்லை என ஜூரிகள் அறிவித்தனர்.
இத்தீர்ப்பு வெளியானவுடன் அங்கு திரண்டிருந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காவல்துறையினரின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். போலீசார் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அம்மாகாணத்தில் எமர்ஜென்சி உத்தரவை பிறப்பித்து கவர்னர் ஜே நிக்சன் உத்தரவிட்டுள்ளார். எனினும் போராட்டக்காரர்களை கவனத்துடன் பொறுமையாக கையாளுமாறு அதிபர் ஒபாமா காவல்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூரிகளின் தீர்ப்பு வெளியானவுடன் கண்ணீர் விட்டு கதறி அழுத பிரவுனின் தாயார், இத்தீர்ப்பால் தான் மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாகவும், இது தவறான தீர்ப்பு என்றும் குறிப்பிட்டார். அதே சமயம் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறையை கைவிட்டு அமைதியாக போராட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.