பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியை வரும் சனிக்கிழமையன்று சூறாவளி புயல் ரூபி தாக்கக்கூடும் என்பதால் அங்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஆயுதப்படை இந்த உச்சகட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த புயலை எதிர்கொள்ளும் வகையில் ஆயுதப்படை மத்திய தலைமை பிரிவு, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் சிவில் பாதுகாப்பு மேலாண்மை சபை ஆகியவை இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சகட்ட எச்சரிக்கையை வெளியிட்ட ஆயுதப்படை தலைவர் க்ரெகோரியோ பியோ கடாபாங்க், முக்கியமான பகுதிகளில் படைகளையும், ராணுவ வாகனங்களையும் தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சூறாவளி புயல் தாக்கியவுடன் துரித கதியில் மீட்பு பணிகள் துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர், 2013 ஆம் அண்டு, யோலாண்டா சூறாவளி புயல் அந்நாட்டை தாக்கியதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.