“எங்கள் கோரிக்கைகளை 3 நாளில் ஏற்காவிட்டால், பிடித்து வைத்துள்ள உங்கள் நாட்டு பிணைக்கைதியை கொல்வோம்” என அமெரிக்காவுக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இங்கிலாந்தில் பிறந்தவர், லூக் சோமர்ஸ் (வயது 33).
இவர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அமெரிக்காவில் கழித்து, அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றார். பின்னர் இவர் ஏமன் நாட்டுக்கு சென்று, 2 ஆண்டுகள் பல்வேறு ஆங்கில நாளிதழ்களுக்கு தனிப்பட்ட பத்திரிகை புகைப்படக்காரர், மொழிபெயர்ப்பாளர், நகல் பதிப்பாளர் பணிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில், அவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந்தேதி ஏமன் நாட்டின் தலைநகரான சானாவில் வைத்து அல்கொய்தா தீவிரவாதிகள் கடத்திச்சென்று வைத்துள்ளனர்.
ஒன்றே கால் ஆண்டாக அவர், பிணைக்கைதியாக உள்ளார்.
இப்போது இவரை கொல்லப்போவதாக அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ 3 நிமிடங்கள் ஓடக்கூடியது.
இதில் உள்ளூர் அல்கொய்தா தலைவர் நாசர் பின் அலி அல் அன்சி, “ எங்கள் கோரிக்கைகள் என்னென்ன என்பது அமெரிக்காவுக்கு தெரியும், அமெரிக்க அரசுக்கு 3 நாள் கெடு விதிக்கிறோம். அதற்குள் எங்கள் கோரிக்கைளை ஏற்காவிட்டால், நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக்க பிணைக்கைதியை கொன்று விடுவோம்” என கூறி உள்ளார்.