இலங்கை அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதி நடக்கிறது. இதில் அதிபர் ராஜபக்சே 3-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி மைதிரிபாலா சிறிசேனா களமிறங்குகிறார்.
ராஜபக்சேவின் ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணியின் மந்திரி சபையில் இருந்த சில மந்திரிகள், தற்போது விலகி வருகிறார்கள். மேலும் புத்த பிட்சுகளின் முக்கியமான கட்சி ஒன்றும் கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. இவ்வாறு ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அதிகரிப்பதால் தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு கடினமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
எனவே மக்களிடையே தனது செல்வாக்கை பெருக்கும் வகையில் அதிபர் ராஜபக்சே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் வடக்கு பகுதியில் வாழும் தமிழர்களின் ஆதரவை பெறுவதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக, நேற்று முன்தினம் அங்கு நடந்த நிகழ்வு ஒன்று அமைந்துள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தீவிரமாக இருந்த காலத்தில் தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட மற்றும் தமிழர்கள் அடகு வைத்த ஏராளமான தங்க நகைகள் விடுதலைப்புலிகள் நடத்திய வங்கிகளில் இருந்தன.
இந்த நகைகள் அனைத்தையும் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரின் போது ராணுவம் கைப்பற்றியது. தற்போது இந்த நகைகளை, உரியவர்களிடம் ஒப்படைக்க அதிபர் ராஜபக்சே முடிவு செய்தார்.
அதன்படி இந்த நகைகளின் உரிமையாளர்கள் என கருதப்படுவோரின் வீடுகளுக்கு, ராணுவ வீரர்களை நேரடியாக அனுப்பி அவர்களின் உண்மைத்தன்மையை கண்டறியும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்தன. இதில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 1960 உரிமையாளர்கள் கண்டறியப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் ராஜபக்சேவின் அரசு இல்லத்துக்கு நேற்று முன்தினம் அழைக்கப்பட்டனர். அங்கு வந்த தமிழர்களிடம், அவர்களின் நகைகளை ராஜபக்சே வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜபக்சே, ‘இந்த மக்களுக்கு தங்கத்தை விட விலை உயர்ந்ததை வழங்கியுள்ளேன். விடுதலைப்புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம், அவர்களின் சுதந்திரத்தை உறுதி செய்துள்ளேன்’ என்று கூறினார்.