இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு முக்கிய வேட்பாளர்களுமே தமிழர் பிரச்னைக்கான தீர்வை முன்வைக்காத நிலையில் தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது இன்னும் முடிவாகாமல் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தல் குறித்து அவர் மேலும் கூறியது: இலங்கைத் தமிழர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதால், நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப இயலாத நிலை உள்ளது.
இறுதிப் போர் முடிந்து 5 ஆண்டுகளாகியும், நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றனர். கூட்டாட்சி முறையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் ஐ.நா. விசாரணையை ஏற்க மாட்டோம் என்றும் எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். தமிழர்களின் பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு இரு முக்கிய வேட்பாளர்களும் என்ன பதிலளிக்கப் போகிறார்கள் என்று அறியக் காத்திருக்கிறோம் என்றார் அவர்.
இலங்கை அதிபருக்கான தேர்தல் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.