பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பொதுத் தேர்தலை அறிவித்துள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவின் கூட்டணியிலிருந்து, தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த 2 இணை அமைச்சர்கள் புதன்கிழமை பதவி விலகினர்.
இது, அதிபர் தேர்தலில் ஏற்கெனவே பல பின்னடைவுகளைச் சந்தித்து வரும் ராஜபட்சவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
அந்த நாட்டில் இதுவரை இல்லாத வகையில், மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் ராஜபட்ச போட்டியிடுகிறார்.
ராஜபட்ச அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மைத்ரிபாலா ஸ்ரீசேனா கடந்த நவம்பர் 21-ஆம் தேதி திடீரென பதவியிலிருந்து விலகினார்.
மேலும், எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜபட்சவை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ராஜபட்ச அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான கட்சிகளைச் சேர்ந்த பழனி திகம்பரம், வி. ராதாகிருஷ்ணன் ஆகிய இணை அமைச்சர்கள் தங்கள் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனர். மேலும், தேர்தலில் எதிர்க் கட்சி பொது வேட்பாளரான ஸ்ரீசேனாவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர். இதையடுத்துஇலங்கை நாடாளுமன்றத்திலிருந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை ராஜபட்சவின் அரசு இழந்துள்ளது.