பெரும் போக நெற் செய்கைக்காக மானிய உரம் வழங்குவதில் கோவில்குளம் கமநல சேவை நிலையம் பாரபட்சம் காட்டுவதாக வவுனியா ஆசிகுளம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கல்நாட்டியகுளம், கோமரசன்குளம், ஆசிகுளம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் போக நெற்செய்கைக்கான மானிய உரம் ஆசிகுளம் பகுதியில் உள்ள பொது நோக்கு மண்டபத்தில் வைத்து நேற்று முன்தினம் (கடந்த 9 ஆம் திகதி) வழங்கப்படும் என கோவிற்குளம் கமநலசேவை நிலையத்தால் அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் குறித்த தினம் ஆசிகுளம் பகுதிக்கு அதிகாலை முதலே சென்ற அப் பகுதி விவசாயிகள் தமது உரமானிய படிவங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர். கமநல சேவைத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் வருகை தந்து உரம் வழங்கும் செயற்பாட்டை மேற்கொண்ட போது அப் பகுதிக்குள் உள்வாங்கப்படாத கள்ளிக்குளம் பகுதியில் இருந்து உழவு இயந்திரம் ஒன்றில் வந்த ஒருவர் பயில் ஒன்றினை வழங்கிவிட்டு 30 ஏக்கருக்குரிய உரத்தினை உடனடியாக ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டார்.
இதனால் நீண்ட நேரமாக அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த மக்கள் தமது பகுதிக்கு உட்படாத ஒருவருக்கு எவ்வாறு எமக்கு வந்த உரத்தினை வழங்க முடியும் என வினாவிய போது, உங்களுக்கு உரிய உரத்தினை நகரில் உள்ள எமது அலுவலகத்கில் பெற்று கொள்ளுங்கள் என கமநலசேவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்ததுடன் உரம் கொடுப்பதையும் நிறுத்திவிட்டு மறு நாள் (நேற்றைய தினம்) அங்கிருந்த மிகுதி உரத்தினையும் வவுனியா நகரில் உள்ள தமது அலுவலகத்திற்கு ஏற்றி வந்துள்ளனர்.
இதன் காரணமாக வவுனியா நகரப் பகுதிக்கு வந்து உரத்தினைப் பெறக் கூடிய வசதி எம்மிடம் இல்லை எனவும் உரத்தினை எமது பகுதியில் வைத்தே வழமை போன்று வழங்குமாறும் அப் பகுதி மக்கள் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றினையும் உத்தியோகத்தர்களிடம் வழங்கியுள்ளனர்.
இருப்பினும் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காது ஏழை விவசாயிகள் ஆகிய தம்மை நகருக்கே வருமாறு உத்தியோகத்தர்கள் விடாப்பிடியாக நிற்பதாகவும் கடிதத்தில் கையொப்பம் இட்டவர்களுக்கு உரம் தர முடியாது எனக் கூறுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ் விடயம் தொடர்பில் கமநலசேவைகள் திணைக்களத்தின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.சுலோஜனா அவர்களை கேட்ட போது, இது தொடர்பில் தம்மால் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.