பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் சனிக்கிழமை முதல் ராணுவத்தினரும் காவல் துறையினரும் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் பெஷாவர் பள்ளிக்கூடத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 132 மாணவர்கள் உள்பட 148 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கப் போவதாக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், அடுத்த கட்டமாக அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டினர். இதையடுத்து, பாகிஸ்தான் உளவு அமைப்புகள் அளித்த குறிப்பான தகவல்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என “டான்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினரும் காவல் துறையினரும் ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
ராணுவ வாகனங்களில் ஆயுதமேந்திய வீரர்கள், வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள், கமாண்டோக்கள் அடங்கிய அதிரடிப் படையினர் ஆகியோர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மோப்ப நாய்களுடன் 6 சிறப்புக் குழுக்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.