வங்கிக்கு சொந்தமான பணப் பெட்டி வாகனத்தில் கொண்டு செல்லப்படும் போது திடிரென பெட்டியின் கதவு திறந்து அதில் இருந்த பணம் காற்றில் பறந்தது. அதனை அங்கிருந்த பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்றது ஹாங்காங்கில். கிறிஸ்துமஸ் பண்டிகையன்று, சாலையில் சிதறிய பணத்தை அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஏராளமானோர் எடுத்துச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியை சுற்றி வளைத்து மீதமிருந்த பணத்தைக் கைப்பற்றினர்.
மேலும், வங்கிக்கு சொந்தமான பணத்தை எடுத்துச் சென்றவர்கள் தாங்களாகவே திரும்ப ஒப்படைக்குமாறும், பணத்தின் சீரியல் எண்ணைக் கொண்டு காவல்துறை கைது செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பணத்தை எடுத்துச் சென்ற இரண்டு பேரை காவல்துறை இதுவரை கைது செய்துள்ளது. மேலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.