இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மழைக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் 4 பேரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டவர்கள். மழையினால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தன. இதன் காரணமாக 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அணைகள், ஏரிகள் நிரம்பி விட்டதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் வெள்ளம் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஏற்கனவே போரினால் வீ டுகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருந்தனர். அவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.