லிபியாவில் எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரவாதிகள் நிகழ்த்திய ராக்கெட் தாக்குதலில் ஏற்பட்ட தீ மேலும் 5 எண்ணெய் கிடங்குகளுக்குப் பரவியது.
முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 19 பேர் உயிரிழந்தனர்.
அல்-ஸித்ரா எண்ணெய் கிடங்கைக் கைப்பற்றும் ஆயுதக் குழுவினரின் முயற்சி முறியடிக்கப்பட்டபோதிலும், 5 எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் தீ வேகமாகப் பரவியுள்ளது.
முக்கிய எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் அமைந்துள்ள அல்-ஸித்ராவில் இந்தத் தாக்குதலை ஃபஜர் லிபியா என்ற இஸ்லாமிய தீவிரவாதக் குழு நடத்தியதாகத் தெரிகிறது. இங்குள்ள 19 எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் 62 லட்சம் பீப்பாய் எண்ணெய் சேமித்து வைக்க முடியும். தற்போதைய தீயில் 16 லட்சம் பீப்பாய் அளவிலான கச்சா எண்ணெய் அழிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் கிடங்குகள் மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக, லிபியாவுக்கான ஐ.நா. உதவிக்குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது நடத்தப்பட்ட இந்த வன்முறையினால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதார பாதிப்பு ஏற்படும்.
லிபியா தொடர்பான ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறப்பட்டுள்ளன. லிபியாவில் உள்ள எண்ணெய் அந்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. அதுவே பொருளாதார ரீதியாக அந்நாட்டுக்கு வாழ்வளிக்கக் கூடியது. தேசிய சொத்தான எண்ணெய் வளத்துக்கு எந்தக் குழுவினரும் எந்த ஆபத்தையும் விளைவிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.