எமது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்னை விட சிறந்த பெறுபேறுகளை பெறவேண்டும் இதுவே எனது ஆசை! வடமாகாணத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் எஸ்.மேகலாதரன்
எமது கல்லூரியில் கற்கும் எதிர்வரும் சந்ததியினர் இதை விட சிறந்த பெறுபேறுகளை பெறவேண்டும் என்பதே எனது ஆசை என வடமாகாணத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் எஸ்.மேகலாதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ்.மேகலாதரன் தற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் விஞ்ஞான பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று வடமாகாணத்தில் முதல் நிலை மாணவனாகவும் மாவட்ட மட்டத்தில் அதி திறமைச் சித்தியுடன் முதல் நிலை மாணவனாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
தேசிய ரீதியில் இம் மாணவன் 18வது இடத்தினை பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த நிலையை அடைவதற்கு எனக்கு வழிகாட்டிய எனது பெற்றோர், பாடசாலை சமூகம், எனது வகுப்பாசிரியர் ரி.சிவராசா ஆசிரியர், எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். எதிர் வரும் காலத்தில் எமது பாடசாலை இதை விட சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முன்னனியில் வரவேண்டும். இதுவே எனது ஆசையாகவுள்ளது எனத் தெரிவித்தார்.
இதேவேளை இப் பாடசாலையில் இருந்து 7 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ள அதேவேளை 15 மாணவர்கள் உயிரியல் பாடத்தில் ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.