தென் கொரியாவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங்-உன் கூறினார்.
ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வட கொரிய அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். இந்நிலையில், புத்தாண்டையொட்டி, கிம் ஜாங்-உன் வியாழக்கிழமை நிகழ்த்திய உரையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த உரையில் அவர் குறிப்பிட்டதாவது:
தென் கொரியாவுடன் மிக அதிகபட்ச நிலையில் பேச்சு நடத்த தயாராக இருக்கிறேன். எந்த விதமான சூழல் உருவாகிறது என்பதைப் பொருத்து, மிக அதிகபட்ச நிலையிலானவர்களுடன் பேசத் தயாராக இருக்கிறேன்.
அமெரிக்காவும் அந்த நாட்டைப் பின்பற்றுபவர்களும், மனித உரிமைகள் என்ற பெயரில் மோசடி செய்து, நமது நாட்டின் தற்காப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களை அழிக்க சூழ்ச்சி செய்கின்றனர்.
அணு ஆயுதங்கள் இந்த நாட்டைப் பாதுகாத்து வருகின்றன. நமது நாட்டின் கண்ணியத்துக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாகத் திகழும் எந்த நடவடிக்கையையும் முறியடிப்போம் என்று கிம் ஜாங்-உன் கூறினார்.
இது குறித்து தென் கொரியா அதிகாரபூர்வ கருத்து எதையும் வெளியிடவில்லை.
அதே சமயத்தில், வட கொரியா, தென் கொரியா இடையேயான உறவுகள் மேன்மையடையும் விதமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அமெரிக்கா அதனை ஆதரிக்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.