வவுனியா மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்களின் அமைப்பான நிழல்கள் அமைப்பினரால் இரத்ததான நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது. மன்னார் வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேச சபை கட்டிடத்தில் இன்று 03-01-2015 காலை இந்நிகழ்வு நிழல்கள் அமைப்பின் தலைவர் ஆரூரன் தலமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரன், நாற்சதுர சுவிசேச சபையின் போதகர் சேகர், இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் கேமச்சந்திர, வைத்தியர் பாலித ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரன், உரையாற்றுகையில்
இரத்ததானம் என்பது நீங்கள் உங்கள் குருதியின் ஒரு பகுதியை இன்னொருவருக்கு வழங்கவதாகும். ஒரு பக்கற் குருதியில் மூன்று பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். ஆகவே குருதிக்கொடையின் மூலம் பெயர் தெரியாத மூன்று பேரின் உயிரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். இரத்ததானம் செய்வதால் எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாது இரத்ததானம் செய்தவுடன் உங்கள் ஈரல் கல்லீரல் மற்றும் எலும்பு மச்சைகளில் இருந்தும் 24 மணிநேரத்தில் தேவையான இரத்தம் உற்பத்தியாகிவிடும் அதனால் உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ பாதிக்கப்பட மாட்டிர்கள் எனத்தெரிவித்தார்.
தொடர்ந்து நாற்சதுர சுவிசேச சபையின் போதகர் சேகர், உரை நிகழ்ததுகையில்
உலகத்தில் வாழுகிற மொத்தஜனத்தொகையில் கிட்டத்தட்ட 15 வீதமான மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவிதேவைப்படுகிறது. அதேநேரத்தில் இரண்டு வினாடிகளுக்கு ஒருவருக்கு என்ற வகையிலே உலகத்திலே இரத்தம் தேவைப்படுகிறது. மனிதருடைய உயிரைப்பாதுகாக்க இரத்ததானம் அவசியம் எனத்தெரிவித்தார்.