பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாரப் பத்திரிகை ஒன்றின் அலுவலகத்துக்குள் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் புதன்கிழமை புகுந்து இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் குண்டு வீசும் சாதனங்களைக் கொண்டு நடத்திய தாக்குதலில், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் உள்பட 12 பேர் பலியாகினர். மேலும், 6 பேர் காயமடைந்தனர்.
பாரிஸ் நகரின் மையப் பகுதியில், கேலிச் சித்திரங்கள், கட்டுரைகளை வெளியிடும் பிரபல வார இதழான “சார்லி ஹெப்டோ’ அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் கருப்பு உடை அணிந்த 2 நபர்கள் ரஷிய தயாரிப்பு இயந்திர துப்பாக்கிகள், ராக்கெட் குண்டு வீசும் சாதனங்களுடன் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
அலுவலகத்தில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதுடன், ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் பலியாகினர். மேலும், 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில், சார்லி ஹெப்டோ பத்திரிகை ஆசிரியரான “சார்ப்’ என்றழைக்கப்படும் ஸ்டீபன் சார்போனியர் உள்ளிட்ட நான்கு கார்ட்டூனிஸ்டுகளும் அடங்குவர்.
மேலும், இரண்டு போலீஸாரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள், பத்திரிகை அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை கடத்திக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர்கள் சென்ற கார் மோதியதில், சிலர் தூக்கி வீசப்பட்டனர். அதில் சிலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பயங்கரவாதம் காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா? எனத் தெரியவில்லை.