துபாய் நகை வியாபாரிகள் தயாரித்த ஐந்தரை கிலோ மீட்டர் நீளமும், 256 கிலோ எடையும் கொண்ட தங்கச் சங்கிலி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
துபாயில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை அந்நாட்டின் 20-வது ஷாப்பிங் திருவிழா நடைபெறுகின்றது. இந்த ஷாப்பிங் திருவிழாவில் நூற்றுக்கணக்கான தங்க நகை வியாபாரிகள் ஸ்டால்களை அமைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகின்றனர்.
இந்த திருவிழாவோடு பெரும் விழாவாக மேலும் ஒரு சாதனையை படைக்க துபாய் தங்க நகை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். 22 கேரட் தங்கத்தில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தங்கச் சங்கிலி ஒன்றை கையினால் தயாரிக்கும் பணியில் ஏராளமான பொற்கொல்லர்கள் இரவு-பகலாக ஈடுபட்டு வந்தனர்.
இதன் மூலம் 1999-ம் ஆண்டில் 4.382 கிலோ மீட்டர் நீளத்துக்கு உலகின் மிக நீளமான தங்கச் சங்கிலியை தயாரித்த தனது முந்தைய கின்னஸ் சாதனையை கடந்த 5-ம் தேதி துபாய் முறியடித்துள்ளது. 1999-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 4.382 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சங்கிலி சுமார் 238 கிலோ தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள 5.522 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சங்கிலி 256 கிலோ எடை கொண்டதாகும். கடந்த 5-ம் தேதி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற இந்த சாதனை தங்கச் சங்கிலியை கின்னஸ் சான்றிதழின் பிரதியுடன், வாடிக்கயாளர்களின் தேவைக்கேற்ப சிறு துண்டங்களாக வெட்டி விற்பனை செய்யவுள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த சங்கிலியின் ஒரு பகுதியை வாங்கி உருக்கி, தங்களுக்கு பிடித்தமான நகைகளை செய்துக் கொள்ள கடந்த மாதத்தில் இருந்தே முன்பதிவும் தொடங்கி விட்டதாக கூறப்படுகின்றது.