இலங்கையில் அனைத்துக் கட்சிகளின் அரசு அமைப்பதற்கு புதிய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா அழைப்பு விடுத்தார். இதேபோல, அனைத்து சிறுபான்மையினருக்கும் உரிய அங்கீகாரம் அளித்து, இலங்கையில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபடப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டு மக்களுக்கு முதல்முறையாக கண்டியில் இருந்து சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
எனது தலைமையிலான அரசில் பங்கு பெற வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இதுபோன்ற அரசு அமைத்தால்தான், இலங்கை மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.
இலங்கையில் வறுமை அகற்றப்பட வேண்டும். இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எனது அரசு செயல்படும். நட்பு ரீதியிலான வெளியுறவுக் கொள்கை மூலம், நாட்டின் பொருளாதாரத்தை எனது அரசு வலுப்படுத்தும் என உறுதியளிக்கிறேன்.
நாட்டில் பெரும்பான்மையின மதத்தினராகத் திகழும் புத்த மதத்தினரை எனது அரசு தொடர்ந்து ஆதரிக்கும். அதேபோல், அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் உரிய அங்கீகாரம் அளித்து, நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் எனது அரசு பாடுபடும் என்றார் அவர்.
முன்னாள் அதிபர் ராஜபட்சவின் அரசில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சிறீசேனா. அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபட்சவை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக சிறீசேனா போட்டியிட்டார். அவரை தமிழ் தேசிய கூட்டணிக் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் ஆதரித்தன.
அதிபர் தேர்தலில், சிறீசேனா 51.28 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராஜபட்ச 47.58 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
ராஜபட்ச தொடர்ந்து 2 முறை இலங்கை அதிபராக பதவி வகித்த காலத்தில், விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒடுக்கினார். அதைத் தொடர்ந்து, தமிழர் பகுதிகளில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகளை ஏவி விட்டதாக ராஜபட்ச மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள சிறீசேனா சிறுபான்மையினரான தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பாரா? அல்லது முன்னாள் அதிபர் ராஜபட்ச கடைப்பிடித்த கொள்கையையே கடைப்பிடிப்பாரா? எனச் சந்தேகம் நிலவியது. ஆனால், தனது முதல் உரையில் சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரம் அளித்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபடப் போவதாக அவர் அறிவித்திருப்பதால், தமிழர்களிடையே புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சிறீசேனா மேலும் பேசுகையில், “நமது நாட்டுக்கு அரசர் தேவையில்லை; மக்களுக்குப் பணியாற்றும் உண்மையான பணியாளர்தான் தேவை’ என்றார். முன்னாள் அதிபர் ராஜபட்சவை பெயர் குறிப்பிடாமல் அவர் இவ்வாறு தாக்கிப் பேசினார்.