பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பத்திரிகை அலுவலகத்துக்குள் கடந்த 7-ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தீவிரவாத தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
அந்த பத்திரிகையின் ஆசிரியர், துணை ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் மற்றும் வடிவமைப்பு பணியில் இருந்த முக்கியமான பணியாளர்கள் என 12 பேர் இறந்து ஒரு வாரமான நிலையில் சார்லி ஹெப்டோ வாரப் பத்திரிகையின் முதல் பதிப்பு இன்று வெளியானது.
சாதாரணமாக ஒவ்வொரு பதிப்புக்கும் சுமார் 60 ஆயிரம் இதழ்கள் மட்டுமே அச்சிட்டு வந்த சார்லி ஹெப்டோ குழுமம், இந்தப் பதிப்புக்கு மட்டும் 50 லட்சம் பிரதிகளை வெளியிட்டுள்ளது.
விற்பனைக்காக இன்று கடைகளுக்கு அனுப்பப்பட்ட இந்த 50 லட்சம் பிரதிகளும் சில மணி நேரங்களுக்குள் விற்றுத் தீர்ந்து விட்டன. சில கடைகளில் புத்தகத்தை வாங்க வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
சில கடைகளின் வாசலில் ’சார்லி ஹெப்டோ வார இதழின் இன்றைய பிரதிகள் இருப்பு இல்லை’ என அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.