இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததன் எதிரொலியாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
கட்சி பிளவுபடுவதை தான் விரும்பவில்லை என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதிபராகப் பதவி வகித்து வந்த அதே வேளையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் மஹிந்த ராஜபட்ச இருந்தார். தற்போதைய அதிபர் சிறீசேனா, அக்கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராஜபட்சவின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சிறீசேனா, தனது பதவியிலிருந்து விலகி, அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
சிறீசேனாவைத் தொடர்ந்து, கட்சியின் பல முக்கியத் தலைவர்களும், ராஜபட்ச அணியிலிருந்து விலகி, சிறீசேனா அணியில் இணைந்தனர். எதிர்க்கட்சிகளின் பின்துணையுடன் சிறீசேனா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ராஜபட்ச வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை புதிய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவிடம் நான் ஒப்படைக்கிறேன். கட்சி பிளவுபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.