அமெரிக்கா, கியூபா நாடுகளுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை கியூபா தலைநகர் ஹவானாவில் புதன்கிழமை தொடங்கியது.
அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவரும் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும், கடந்த மாதம் முடிவெடுத்தனர்.
“கியூபா உடனான அமெரிக்காவின் காலாவதி கொள்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும். இரு தரப்பு உறவுகள் மேம்பட, கடந்த 50 ஆண்டுகளாக எதுவும் செய்யப்படவில்லை. இதற்காக தற்போது புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என்றும் ஒபாமா திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.
அதையடுத்து, கியூபா தலைநகர் ஹவானாவில் அமெரிக்கா, கியூபா நாடுகளுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை புதன்கிழமை தொடங்கியது. முதல் நாள் பேச்சுவார்த்தையில், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை உதவி அமைச்சர் அலெக்ஸ் லீயும், கியூபாவின் வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஜோசிஃபினா விடாலும் பங்கேற்று, புலம் பெயர்வோர் பிரச்னைகள் குறித்து பேசியதாக தெரிகிறது. வியாழக்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கியூபாவின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமெரிக்காவும், கியூபாவும், வெவ்வேறு அரசியல் கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், இருதரப்பு உறவுகள் மேம்படும் வகையில், இரு நாடுகளும் பரஸ்பரம் தங்கள் கருத்துகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் செயல்படும் என நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.