இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதென்று, ஐரோப்பிய யூனியன் அமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் இருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகளில் நடத்தப்பட்ட சோதனையில், பூச்சித் தொற்று இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து மாம்பழங்கள் உள்ளிட்ட சில பழங்கள், பாகற்காய், கத்திரிக்காய், புடலங்காய் ஆகிய காய்கறிகளை இறக்குமதி செய்ய கடந்த ஆண்டு மே மாதம் தடை விதிக்கப்பட்டது. அப்போது, இந்தத் தடை உத்தரவானது, நடப்பாண்டு டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய உணவுக் கழகம், கால்நடை அலுவலகம் ஆகியவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய ஆய்வில், தாவர ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் முறை மேம்பட்டிருப்பது தெரிய வந்தது. ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களில் பூச்சித் தொற்று இல்லாதவாறு தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்தியா உறுதி அளித்தது.
இதையடுத்து, இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்தப் பரிந்துரை மீது பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தாவர சுகாதாரம் தொடர்பான ஒழுங்குமுறை குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஒப்புதலின் மூலம், ஐரோப்பிய யூனியனின் அடுத்த இறக்குமதிக் காலமான மார்ச் மாதம் முதல் இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய முடியும் என்று ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பில், இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்ட போதிலும், அதுதொடர்பான சட்டத்தை ஐரோப்பிய யூனியனின் அங்கம் வகிக்கும் 28 நாடுகள் முறைப்படி ஏற்க வேண்டும். மேலும், அந்தச் சட்டத்தை ஐரோப்பிய யூனியன் அமைப்பு பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைய இன்னும் ஒரு மாத காலம் பிடிக்கும்.
இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதென்ற ஐரோப்பிய யூனியனின் முடிவை இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் ஜேம்ஸ் பெவன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்காக பிரிட்டன் அரசு கடினமாக முயன்றது. தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்காக இந்தியாவுக்கு நிபுணர்களை அனுப்பியது. தடை நீக்கம், இந்திய ஏற்றுமதியாளர்கள், பிரிட்டன் நுகர்வோருக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்தியாகும் என்றார் அவர்.