யாழ் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்புப் பகுதியில் இதுவரை பொதுமக்களுக்கு விடுவிக்கப்படாத ஆறு ஆயிரம் ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்குமிடையில் கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன் போதே அமைச்சர் இந்த இணக்கத்தினை முதலமைச்சருக்கு வழங்கியிருந்தார்.
கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள்குடியேற்றுவது மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து முதலமைச்சருடன், அமைச்சர் சுவாமிநாதன் கலந்துரையாடினார்.
மீள்குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்து தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இதனை செய்து முடிக்க எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.