இலங்கையில், முன்னாள் அதிபர் ராஜபட்சவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்த நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியான ஷிராணி பண்டாரநாயக, அந்தப் பதவிக்கு புதன்கிழமை மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அவர், கடந்த 2013-ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சட்டத்துக்குப் புறம்பான காரணங்களால் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்குப் பின் தலைமை நீதிபதியாக உள்ள மோகன் பெரீஸின் நியமனம் செல்லாது என புதிதாக அதிபர் பொறுப்பேற்றுள்ள மைத்ரிபாலா சிறீசேன, மோகன் பெரீஸூக்கு கடிதம் அனுப்பினார்.
அதன் தொடர்ச்சியாக, தலைமை நீதிபதியாக மீண்டும் நியமிக்கப்பட்டு உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு புதன்கிழமை வந்த பண்டாரநாயக்கவுக்கு வழக்குரைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (படம்).
இதற்கிடையே, ஏற்கெனவே தலைமை நீதிபதியாக உள்ள மோகன் பெரீஸ், தனது பதவியை தாமாகவே ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.