கனடா – கனடா நாட்டு மருத்துவ ஆய்வு கழகம் சமீபத்தில் ஒரு மருத்துவ ஆய்வை நடத்தியது. இதில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இருதய நோய், நீரழிவு நோய், புற்று நோய் அதிகம் தாக்கும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு குழு தலைவர் டேவிட் ஆல்டர் கூறுகையில்,
சராசரியாக ஒரு மனிதனின் பாதிக்கும் மேற்பட்ட பகல் நேரம் டிவி முன்போ, கம்ப்யூட்டர் முன்போ உட்கார்ந்தவாறே கழிகிறது. அவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்தாலும் கூட இருதய நோய், நீரிழிவு, புற்றுநோய் தாக்கும் அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியாது. உடற்பயிற்சி செய்யாதவர்களையும் மிதமான உடற்பயிற்சி செய்பவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்குகிறது.
அதிகளவில் உடற்பயிற்சி செய்பவர்களை இந்த நோய்கள் குறைவாகவே தாக்குகின்றன. எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களை இந்த நோய்கள் தாக்காது என்பதை அறிய மேற்கொண்டு ஆய்வுகள் நடத்த வேண்டும். எனவே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.