வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விழையாட்டுப்போட்டி 30-01-2015 கல்லூரியின் அதிபர் திருமதி ஜி.நடராசா தலமையில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம்; ஆகியவற்றின் அனுசரணையுடன் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில்
மாணவர்களுடைய திறமைகளை இனங்கண்டு அவர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்கி மாகாண மற்றும் தேசிய மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது ஆகவே எங்களுடைய மாகாணசபைக்கூடாக செய்யக்கூடிய காரியங்களை மும்மொழிந்து செய்வதற்கு நாங்கள் உங்களுடன் சேர்ந்து உழைப்போம் என குறிப்பிட்டார்.
மேலும் நான் ஒரு பின்தங்கிய கிராமத்தின் பாடசாலையில் படித்து அதன்பின் நகரப்பாடசாலைகளில் படித்து நான் ஒரு வைத்தியராக இருக்கின்றேன். அதற்கு முக்கிய காரணம் எங்களை வழிநடத்தி வளத்தெடுத்து எங்களுக்கு கல்வியறிவூட்டிய பெற்றோரும் இரண்டாவதாக அந்த பெற்றோருக்கு உறுதுணையாக எங்களை வளர்த்தெடுத்த அந்த கல்விச்சமூகமும் தான் காரணம் என நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து உரையாற்றிய வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கடந்த 30வருட காலம் நடைபெற்ற யுத்தத்தில் எமது சொத்துக்கள் அழிக்கப்பட்டுஇ எங்களுடைய உயிர்கள் அழிக்கப்பட்டு,எங்களுடைய கலை கலாசாரம் பண்பாடுகள் அழிக்கப்பட்டு பல விடயங்களை நாங்கள் இழந்து பல புதிய விடயங்களை நாங்கள் கற்றுக்கொண்டிருக்கின்றோம். அதில் குறிப்பாக ஏனையவர்களில் தங்கியிருந்து ஏனையவர்களிடம் கையேந்தும் பழக்கத்தை நாங்கள் எல்லோரும் கற்றிருக்கின்றோம். இந்த கொடிய யுத்தத்தில் இரண்டு கண்பார்வையையும் இழந்தவர்கள் அத்துடன் ஒரு கை அல்லது ஒரு கால் இல்லை இப்படி 20 ஆண்களும் 20 பெண்களும் கைதடியிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான விழிப்புலனற்றோர் விடுதியில் அவர்கள் கிட்டத்தட்ட 600 கோழிகளை கொண்ட பெரிய கொழிப்பண்ணையொன்று வைத்துள்ளார்கள். அந்த கோழிப்பண்ணையை அங்குள்ள விழிப்புலனற்றவர்கள் நடத்துகிறார்கள். அத்துடன் தங்கள் உணவிற்குத் தேவையான பொருளாதாரத்தை அவர்களே தேடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இந்த சமூகத்திற்கு பாரமென்று நாங்கள் நினைக்கின்றோம் அவர்கள் அப்படி நினைக்கவில்லை நாங்கள் தான் அவர்களுக்கு பாரமாக இருக்கின்றோம் போல் எனக்குத் தெரிகின்றது. ஆகவே அவர்களால் சாதிக்க முடிகிறதென்றால் பெற்றோரால் பராமரித்து வளர்க்கப்படும் நீங்கள் ஏன் படிக்க முடியாது சாதிக்க முடியாது என ஒவ்வொரு மாணவனும் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அகிலேண்டேஸ்வரர் கோவில் செயலாளர் எ.நவரெட்ணராஜா, உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் ஏ.எம்.சுபைர் ஆகியோர் கலந்த கொண்டனர்.