குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் மாத்திரையை உருவாக்கிய விஞ்ஞானியான கார்ல் ஜெராஸி (91) காலமானார்.
ஆஸ்திரியாவில் பிறந்த இவர், அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றார். 1951-இல் இவரது தலைமையிலான ஆய்வுக்குழு “நாரத்ரின்ட்ரோன்’ எனும் மூலக்கூறைக் கண்டுபிடித்தது. அவருக்கு அப்போது 28 வயது. அந்த மூலக்கூறு அடிப்படையிலேயே குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் மாத்திரைகள் உருவாக்கப்பட்டன.
இதையடுத்து, “குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரையின் தந்தை’ என கார்ல் ஜெராஸி அறியப்பட்டார்.
குடும்பக் கட்டுபாடு மாத்திரை ஒரு நாட்டின் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க உதவியது மட்டுமல்லாமல், பாலியல் உறவுகளிலும், பெண்களின் வாழ்விலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. உலகெங்கும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில், அறிவியலைவிட, அரசியல் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் ஒரு முறை குறிப்பிட்டார்.
வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர், பல்வேறு தனியார் வேதியியல் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையின் கெளரவப் பேராசிரியராக இருந்தார். கரிம வேதியியல் துறைக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ள அவர், சுமார் 1,200 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இரு கவிதைத் தொகுப்புகள், விஞ்ஞான நாவல்கள், நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது சுயசரிதை 4 தொகுதிகளாக வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.30) அவர் இறந்ததாக ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.