அடுத்த நிதியாண்டுக்கான 4 லட்சம் கோடி டாலர்கள் (சுமார் ரூ.247 லட்சம் கோடி) மதிப்புடைய பட்ஜெட் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அதிபர் ஒபாமா அனுப்பி வைத்துள்ளார்.
எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் நிறைந்த நாடாளுமன்றத்தில் இந்த பட்ஜெட் திட்டம் தாக்கல் செய்யப்படும்போது, அது நிச்சயம் நிராகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பொருளாதாரத் தேக்க நிலை காரணமாக, இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட எளிமையான பட்ஜெட்கள் போலின்றி, தற்போதைய ஆரோக்கியமான பொருளாதாரத்தின் அடிப்படையில் உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, பாதுகாப்புத் துறைகளுக்கு புதிய பட்ஜெட் திட்டத்தில் தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், பாதுகாப்புத் துறை அல்லாத தொழில் வளர்ச்சிக்கான பிற துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என குடியரசுக் கட்சி வலியுறுத்தி வருகிறது.