இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்குப் பிறந்த 16,000 குழந்தைகள் குடியுரிமைகள் இல்லாத நிலையில் அகதிகள் அந்தஸ்துடன் வாழ்ந்து வருவதாக ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவனர் எஸ்.சி.சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப வேண்டுமென இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடிவரும் நிலையில் இவ்விஷயம் தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அகதி முகாம்களில் பிறக்கும் குழந்தைகள் குறித்து இலங்கை தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். பிறந்த ஒரு வருடத்துக்குள் பதிவு செய்த பின் பிறப்புச் சான்றிதழைப் பெற வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் 24,000ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. இவற்றில் 8,000 குழந்தைகளுக்கு மாத்திரமே பதிவு செய்யப்பட்டிருப்பதாக எஸ்.சி.சந்திரஹாசன் சுட்டிக் காட்டியுள்ளார்.
16,000 பிள்ளைகள் பதிவு செய்யப்படவேண்டி உள்ளது. இவர்களில் பலர் இளைஞர்களாகி விட்டனர். அவர்கள் நாடு திரும்பினாலும் அது சட்ட ரீதியானதாக அமையாது. எனவே அவர்களின் பதிவுகளை இந்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அகதி முகாம்களில் பிறக்கும் குழந்தைகளைப் இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யும் நடவடிக்கை சுமுகமாக நடைபெற்றது. அப்போதிருந்த தூதரக அதிகாரி மக்களிடம் சென்று பதிவுகளை நடத்தினார். இந்த நிலையில் சந்திரிகா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையை மீண்டும் கடைப்பிடிப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பு பதிவுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், ஈழ ஆதரவு குழுக்களால் இந்த முயற்சி தடை ஏற்பட்டது.
இந்தியாவிலுள்ள அகதிகளை நாட்டுக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்களை பதிவு செய்வது தொடர்பில் தெளிவான நிலைப்பாடு ஒன்றை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.