இந்தியாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் மூன்றாவது முறையாக இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார்.
66 வயதான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார்.
காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
இந்த சூழலில், இன்று (05.05.2021) நடந்த பதவியேற்பு விழாவில், 3 ஆவது முறையாக முதல்வராக மம்தா பானர்ஜி கம்பீரமாக பதவியேற்றார்.
கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இன்று காலை 10.45 மணிக்கு அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவினார். இதனால், ஒரு எம்.எல்.ஏ.வாக இல்லாமல் மம்தா முதல்வராக பதவி ஏற்றார்.
எனினும், இப்படி இவர் பதவியேற்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்ற போதும் அவர் எம்.எல்.ஏ.வாக இல்லை.
முதல்வராக பதவியேற்ற சில மாதங்கள் கழித்து போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வென்றது குறிப்பிடத்தக்கது. அது போல் இம்முறையும், அவர் மீண்டும் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றிப் பெற வேண்டும்.
தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு, பதவியேற்பு நிகழ்வு குறைந்த நபர்களுடன் எளிமையாக நடைபெறும் என ராஜ்பவன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பிற மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
மேற்குவங்க மூத்தத் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பீமன் போஸ், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோருக்கு இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.