நேர்காணல் :- ஆர்.யசி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இராணுவ மனநிலையே காணப்படுகின்றது. அதனால் தான் என்றும் இல்லாத அளவிற்கு இராணுவ ஆக்கிரமிப்புகள், தலையீடுகள் இடம்பெறுகின்றன.
ஜனநாயகத்தை முழுமையாக சிதைக்கும் இந்தக் கொள்கையானது நாட்டை நிச்சயமாக இராணுவ ஆட்சியை நோக்கியே பயணிக்க வைத்துள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து மீளவும், சர்வதேச கடன் பொறிமுறையில் இருந்து தப்பிக்கவும் உங்களிடத்திலுள்ள நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டம் என்ன?
பதில்:- நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் அதற்கான நீண்டகால கொள்கைத்திட்டமொன்று இருக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்திடம் நீண்டகால கொள்கைத்திட்டமென்று ஒன்றுமே இல்லை. குற்றவாளிகளை காப்பாற்றுதல், வளங்களை விற்பனை செய்தல் போன்ற கொள்கைகளே உள்ளன.
எம்மிடம் மாற்றுத் திட்டங்கள் உள்ளன, அதற்கு முதலில் உறுதியாக பொருளாதார கொள்கையொன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தேசிய உற்பத்தியை நம்பிய, அதில் தாக்கம் செலுத்தும் கொள்கைகளை வகுக்க வேண்டும்.
ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும். இப்போதுள்ள கடன்கள் நீண்டகால அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டவையாகும். இதனை உடனடியாக செலுத்த முடியாது.
எம்மால் சில சலுகைகளை பெற்றுக்கொள்ள இயலும். ஆனால் பிணைகளை செலுத்துவதில் எம்மால் காலந்தாழ்த்த முடியாது. அதேபோல் நடுத்தர மற்றும் சிறிய உற்பத்தியாளர்களின் தொழில்களைப் பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை வலுவாக்குவதோடு வரிக்கொள்கையில் மாற்றங்களை முன்னெடுத்து முன்னேற்றங்களைக் காண முடியும்.
நாட்டில் உள்ள வளங்கள் முறையாக பயன்படுத்தப்படாது விற்பனை செய்யப்படுகின்றன. எமது நாட்டிடமிருந்து வளங்களைப் பெற்றுக்கொண்ட சர்வதேச நிறுவனங்கள் இலாபம் ஈட்டுகின்றன.
ஆனால் அந்த விடயத்தில் நாடு நட்டமடைந்து செல்கின்றது. ஆகவே இங்கு முகாமைத்துவமே பிரச்சினையாக உள்ளது. அத்துடன் சர்வதேசத்துடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளும் மோசமானதாக அமைந்துள்ளன.
கேள்வி:- அரசாங்கம் சர்வதேசத்துடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகள் நாட்டுக்கு எவ்வாறான தாக்கத்தை செலுத்துமென நினைக்கின்றீர்கள்?
பதில்:- அரசாங்கம் சகல நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவது என்பது வேறு, சகல நாடுகளையும் இலங்கைக்குள் தலையிட அனுமதிப்பது என்பது வேறு.
ஆட்சியில் உள்ள அரசாங்கம் கையாண்டு வருகின்ற சர்வதேச கொள்கையானது பலமான நாடுகள் இலங்கைக்குள் மோதிக்கொள்ளும் நிலையொன்றை உருவாக்கியுள்ளது.
அதுமட்டுமல்ல இராணுவத்தை வைத்துக்கொண்டு நாட்டை மாற்றியமைக்க முடியும் என்பதே இவர்களின் எண்ணமாக இருக்கிறது. அரச துறைகளில் இராணுவத்தை நியமித்து நிருவகிக்க முயற்சித்தும் இறுதியாக தோல்வியையே சந்தித்துள்ளனர்.
இராணுவத்தை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. அதேபோல் தற்போது செய்துகொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகள் மிகவும் மோசமானவை. எமது வளங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் சூறையாடும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளன.
நன்றி – வீரகேசரி