சந்தோஷ் நம்பிராஜன், கவிஞர் விக்ரமாதித்தன் அவர்களின் இளைய மகன். தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு துறையில் பட்டயப்படிப்பை நிறைவு செய்தவர். 10 ஆண்டுகளாக, ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். முதல் படம் ஒளிப்பதிவாளராக ‘கருப்பம்பட்டி படத்தில் பணியாற்றிய இவர் குபீர், கத்துக்குட்டி முதலிய படங்களிலும் ஒளிப்பதிவாளராக கடமை ஆற்றியுள்ளார். கதாநாயகனாக முதல் படம்’ டுலெட் ‘. இரண்டாவது படம்’ வட்டார வழக்கு ‘ இந்தப் படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. அசலான தமிழ் முகத்துடன் நாயகனாக நடிக்கத் துவங்கியுள்ள சந்தோஷ் நம்பிராஜன், தனது திரைப்பட அனுபவம் குறித்து வணக்கம் லண்டனுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் வாசகர்களுக்காக இதோ.
டுலெட் திரைப்படம் தற்போதைய திரைப்படங்களிலிருந்து எந்தளவுக்கு வேறுபடுகிறது?
டுலெட் தமிழ் வாழ்க்கையை பதிவு செய்த படம். மற்ற படங்களை எதார்த்த படங்களுனு சொல்றது என்னன்னா வாழ்வியலை வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக என்று சொல்வார்கள் எதார்த்த படங்களை விட சிறப்பான நான் என்ன நினைக்கிறேன்னா நான் ஒரு ரசிகனாக ஒரு தமிழ் வாழ்க்கையை பதிவு செய்த தமிழ் படம் டுலெட். தமிழர்களின் நகரமயமாக்கல் பொருளாதாமயமாக்கலில் ஒரு குடும்பம் என்னவாகிறது நடுத்தரக் குடும்பம் ஒரு விளிம்பு நிலைக்கு எப்படி செல்கிறது. யதார்த்த தமிழ் படங்கள் எல்லாம் ஒரு சின்ன ஒரு போலித்தனம் இருக்கும் வேணும்னு கொஞ்சம் சோகத்தை தினிப்பது, பிரச்சாரம், புத்திசாலித்தனம் இருக்கும், டுலெட் படத்தில் உண்மை இருந்தது.
வீடு, வாடகை, வாடகை வீடு, ஒரு நிழலுக்காக போராடும் உயிர்கள், கூடடையும் நேரத்தில் வீடு வந்து சேரும் பொழுது வீடும் ஒரு பேராட்டமாக இருந்தால் ஒரு கலைஞனின் மனம் என்னவாகும். மாற்று சினிமாக்கள் தமிழ்ல நிமாய் கோஷ், ஜான் ஆபிரகாம் காலத்திலே ஆரம்பமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் தமிழ் அடையாளம் என்று மிக சொற்பமான படங்கள் தான் சொல்ல முடியும் நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் 100 நல்ல தமிழ் வாழ்வியல் படங்கள் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தமிழ் சமுகம் அனைத்து கலைகளிலும் வரலாற்றில் செழித்திருக்கிறது. தஞ்சை பெரிய கோயில் கட்டிட கலை, சித்தன்னவாசல் ஓவியம், தமிழிசை, பரதம், கரகம், சிலப்பதிகாரம், திருக்குறள், சங்க இலக்கியம் என்று அனைத்தும் உலகத்தரத்திற்க்கும் மேலாக உள்ளது, ஆனால் தமிழ் சினிமாவில் உலக சினிமாவிற்கான பங்களிப்பு மிக குறைவு. டுலெட் உலகம் திரைப்பட விழாவில் மட்டுமல்லாமல் உள்ளூரிலும் கொண்டாடபட்ட படம்.
சந்தோஷ் எப்படி ஹீரோவானார் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளது?
அடிப்படையில் நான் ஒளிப்பதிவாளர், ஆசான் செழியன் அவர்களிடம் 5 படங்கள் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். கருப்பம்பட்டி, கத்துக்குட்டி படத்தின் ஒளிப்பதிவாளர். டிஜிட்டல் கேமரா புரட்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர்களுக்கான மதிப்பு குறைந்துவிட்டது. திறமையானவர்களுக்கு மதிப்பில்லை. தமிழ் சினிமாவில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், வெற்றி பெற்ற இயக்குனர்களு மட்டும் தான் மதிப்பும், சம்பளமும் கிடைக்கும். 30 வயதிற்கு மேல் இசையை கற்றுக் கொண்டு இசையமைப்பாளர் ஆவது என்பது நினைக்கவே பயமாக இருந்தது. நடிக்க தெரியாது, நடிக்க வாய்ப்பு தேடுவது தமிழ் சினிமா பாலைவனத்தில் தண்ணீர் தேடுவது போல, எனக்கு இருந்த ஒரே வாய்ப்பு இயக்குனர் ஆவது, தொழிளாலர்கள் பற்றி ஒரு திரைக்கதை எழுதி தயாரிப்பாளர் தேடினேன்.
தயாரிப்பாளர் தேடுவது என்பது பாலைவனத்தில் உள்ள தண்ணீரில் மீனை தேடுவது போல, நிறைய பேரிடம் கதையை சொன்னேன், புது தயாரிப்பாளர்களில் பலர் நம்பிக்கையானவர்களை நம்பமாட்டார்கள், ஏமாற்றுபவர்களை நம்புவார்கள். என்னை அவர்கள் நம்பவில்லை. அப்போது செழியன் அண்ணன் நடிக்க அழைத்தார். ஒன்று நடிக்க வேண்டும் அல்லது சினிமாவை விட்டு வெளியேற வேண்டும். தயாரிப்பாளர்கள் நடிகர்களை நம்புவார்கள். . செழியன் அண்ணன் நடிக்கவைத்தார், நடித்தேன். தற்சமயம் ‘வட்டார வழக்கு’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இயக்குனர் இராமச்சந்திரன். இரண்டு படங்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளேன். அடுத்து ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.
டுலெட் திரைப்படத்தை தமிழ் உலகம் அல்லது தமிழ் திரை உலகம் கொண்டாடுகிறதா? இந்த படத்திற்கான கவனம் எந்தளவுக்கு இருக்கிறது?
பெங்களூரிலும் கோவாவிலும் ‘டுலெட்’ படம் பார்த்துவிட்டு என் கைகளைப் பிடித்து கொண்டு அவர்கள் மொழியில் பாராட்டினார்கள். மொழி அங்கு தடையில்லை, அன்பை பரிசளித்தார்கள், பெற்றுக்கொண்டேன். பர்மா, ரங்கூன் நகரில் திருக்கோம்பை முருகன் கோவிலில் ஹாங்காங் நகரில் இருந்து வந்த சுப்ரமணியம் என்பவர் ‘டுலெட் ‘படம் பற்றி சிலாகித்துப் பேசினார். சென்னை ப்ராட்வேயில் நடைமேடையில் கடை போட்டிருநதவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு “படம் பிரமாதம் சார், எங்க கதைய அப்படியே எடுத்துருக்கீங்க” என்று பாராட்டினார், அவரது தாயாரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
அந்த தாய் என்னை ஆசீர்வாதம் செய்தார்கள், ஒரு நடிகனுக்கு இதைவிட பெரிய பேறு என்ன வேண்டும்! ‘ஒவ்வொரு படத்திற்கும் ஆயுள் உண்டு, சிலது 1 வாரம், 25 நாட்கள், 50 நாட்கள், அந்த தலைமுறை மாறியது பழையன கழிந்து விடும். டுலெட் நிலைபேறுடமை பெற்ற படம், காலம் செல்லச் செல்ல அதன் மதிப்பு கூடும். அதுதான் உண்மையான கலை.’ டுலெட் ‘படம் போன்று இன்னும் நூறு படங்கள் வரும் போது உலகஅளவில் தமிழ் சினிமா கவணம் பெறும், ‘டுலெட் அந்த நம்பிக்கைக்கான ஒளி. இதற்கு இயக்குனர் செழியன் அண்ணன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.’ டுலெட் ‘உயிர் உள்ள படம், எப்பொழுதும் வாழும். உலகெங்கிலும் தமிழர்கள் அவர்கள் கதைகளை படமெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள், ஈழத்து சினிமா, மலேசியா தமிழர் சினிமா, சிங்கப்பூர் தமிழர் சினிமா, புலம்பெயர்ந்த தமிழர்கள் சினிமா டுலெட் படமும் படமாக்கிய விதமும் தெரிந்து கொண்டால் அந்த புது இயக்குநர்களு பக்க பலமாக இருக்கும்…
பா. ரஞ்சித் கூறிய ராஜராஜசோழன் பற்றிய கருத்து குறித்து ஒரு சினிமா கலைஞராக உங்கள் நிலைப்பாடு?
‘வல்லான் வகுத்ததே வழி’ வல்லான் எழுதியதே வரலாறு. உலகெங்கிலும் தமிழர்கள் அடிமைப்பட்டு உள்ளனர். நிலமே அதிகாரம். நமது நிலத்தை நாம் மீட்டெடுக்கும் போது மட்டுமே திரும்ப அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அதிகாரம் வரும் போது நாம் வரலாறு படைக்க முடியும். தமிழர்களின் கடந்த கால பெருமைகளையும் சிறுமைகளையும் பேசுவது எதிர்கால கட்டமைப்பை பலவீனமாக்கவே செய்யும். தமிழ் தலைவர்களிடம் எதிர்காலம் திட்டம் எதுவும் இல்லை. தமிழர்கள் திட்டமிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியால் காவு வாங்கப்படுகின்றனர். கடந்த கால பகைமை மறந்து ஒன்று கூடி முன்னேற வேண்டிய தருணத்தில் நம் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டிக்கொண்டிருந்தால் திரும்பவும் வீழ்த்தபடுவோம். எழுவதற்கான நேரம், ஒன்றுகூடுவோம் மீண்டெழவோம்.
நேர்காணல் – வணக்கம் லண்டனுக்காக தீபன்