Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் தமிழகத்தின் தொல் நிலமே ஈழம்தான்: இயக்குனர், கவிஞர் குட்டிரேவதியுடன் நேர்காணல்

தமிழகத்தின் தொல் நிலமே ஈழம்தான்: இயக்குனர், கவிஞர் குட்டிரேவதியுடன் நேர்காணல்

13 minutes read

தமிழக கவிஞர்களின் மிகவும் முக்கியமானவர் குட்டிரேவதி. முலைகள் என்ற கவிதை தொகுப்பின் வழியாக அதிகம் பேசப்பட்ட குட்டிரேவதி பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000) முலைகள் (2002) தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003) உடலின் கதவு (2006) யானுமிட்ட தீ (2010) மாமத யானை (2011) போன்ற கவிதை தொகுப்புக்களை எழுதியுள்ளார். மரியான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதுடன் அப் படத்தில் “நெஞ்சே எழு..” என்ற பாடலையும் எழுதியிருந்தார். தற்போது சிறகுகள் திரைப்படத்தின் ஊடாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் குட்டிரேவதி, தினக்குரல் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலை நன்றியுடன் பிரசுரிக்கிறது வணக்கம் லண்டன். -ஆசிரியர்

யார் இந்த குட்டி ரேவதி…?

குட்டி ரேவதி, அடிப்படையில் முழுமையும் ஒரு கவிஞர்.  சித்தமருத்துவர். இந்தியாவின் சாதியப் பாகுபாடுகள், மத வேறுபாடுகள் மனிதர் மீது திணிக்கும் ஒடுக்குமுறையால் ஏற்றத்தாழ்வுகளால் அம்பேத்கரியத்தை உள்வாங்கிக் கொண்ட ஒரு பெண்ணியவாதி. இப்பொழுது ‘சிறகு’ படத்தின் வழியாக திரை இயக்குநர் ஆகியிருக்கிறேன். அவ்வளவே. சித்த மருத்துவர், பாடலாசிரியர், திரை இயக்குநர் என்பதெல்லாம் அந்தக் கவிஞரின் அங்கங்கள் தாம்.

எவ்வாறு திரைத்துறைக்குள் வந்தீர்கள்?

நவீன கவிதைக் களத்தில் தீவிரமாய் இயங்கிக் கொண்டிருந்த 2000 களில், சகக் கவிஞரும தோழியுமான ஒருவர்,  தன் படத்திற்கு திரைக்கதை எழுதத் தெரிந்த, தமிழ் மொழித்திறன் கொண்ட ஒருவர் வேண்டுமென்ற இயக்குநர் பரத்பாலாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.  மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் கதையில் உருவான 19th Step என்றதொரு படத்தில் பரத்பாலாவிடம் பணியாற்றத் தொடங்கினேன். தயாரிப்புக் காரணங்களால் அந்தப்படம் படப்பிடிப்பிற்குச் செல்லும் முன் நின்று போனது.

MAuqDtjOSDufMON4LFla4A_thumb_81f0.jpg

அதற்குப் பின், அவர் தொடங்கிய ‘மரியான்’, என்ற படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினேன். திரைத்துறை தான் என்னுடைய துறை என்று  கல்லூரிப் பருவம் தொடங்கி எப்பொழுதுமே எண்ணியிருந்தேன். என் கல்லூரிக் காலங்களில் திருநெல்வேலியில் ஆர்.ஆர். சீனிவாசன் நடத்திவந்த காஞ்சனை திரைப்பட இயக்கம் தான் என் திரைத்துறைச் சிந்தனைக்கு வித்திட்டது. என் வாழ்வில் எப்பொழுது என்றாலும் திரைத்துறைக்கு வந்திருப்பேன். ஒரு கவிஞராக எழுதத்தொடங்கிய பின்பு, இலக்கிய இயக்கம் ஒரு குறிப்பிட்ட காலத்தையும் ஆற்றலையும் என் செயல்பாட்டையும தீவிரமாக எடுத்துக் கொண்டது.

காட்சிப் படிமங்களுக்கும் எனக்குமான தொடர்பு மிகவும் ஆழமானது என்பதை என் எழுத்தின் வழியாகவே உணர்ந்து கொண்டேன். காட்சிகளைக் கையாள்வதற்குக் கையில் இருக்கும் பெரும் வாய்ப்பு, திரைத்துறையே.

உங்களுடைய சிறகு திரைப்படம் உருவாகியது பற்றி.? யாரெல்லம் நடித்து இருக்காங்க?

‘மரியான்’, திரைப்படத்திற்குப் பின் பல தயாரிப்பாளர்களைத் தொடர்ந்து சந்தித்து, திரைக்கதைகளைச் சமர்ப்பித்து, இயக்குவதற்கான வாய்ப்பினைத் தேடிக் கொண்டே இருந்தேன். தயாரிப்பாளர் மாலா மணியன் அவர்களை, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் தந்த ஓர் இரவு விருந்தினில் சந்தித்தேன். அவரிடம் என் ஆர்வத்தைத் தெரிவித்தேன். அது வரை, மணிரத்னம் போன்ற இயக்குநர்களுக்கு நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்த மாலா மணியன், ‘நான் படம் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன். உங்கள் திரைக்கதையை வாசிக்கக் கொடுங்கள்’, என்று தயாரிப்பாளராக முன் வந்தார். இப்படித்தான் எங்கள் பயணம் தொடங்கியது.

‘மெட்ராஸ்’, படத்தில் நடித்த ஜானி தான் இப்படத்தின் கதாநாயகன், அவர் பெயர் ஹரிகிருஷ்ணன். ‘மரியான்’, படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருந்தார். வசீகரமான, துடிப்பான, திறமையான கலைஞன். வடசென்னை, சண்டைக்கோழி 2 போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில், உணர்வுப்பூர்வமான, நவீன இளைஞனாக அவரை நீங்கள் பார்க்கமுடியும். அக்‌ஷிதா, தமிழ் நன்கு பேசத் தெரிந்த கதாநாயகி. மருத்துவர் வித்யா மற்றும் நிவாஸ் ஆதித்தன் ஆகியோரும் முக்கியக்கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சிறகு திரைப்படத்தின் திரைவடிவத்தை உங்களது குழு எந்தளவிற்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது.?

திரைக்கதையை நிறைவு செய்து கொடுத்ததும், அழகான செயல்திட்டத்தை, வடிவத்தை எங்களிடம் கொடுத்தார் தயாரிப்பாளர். அதன் படி, பணியாற்றுவது எங்கள் எல்லோருக்கும் எளிதான ஒரு விடயமாக இருந்தது. மிகவும் இறுக்கமான பட்ஜெட்டில் வேலை செய்த படம். என்றாலும், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, இசை இயக்குநர் அரோல் கொரேலி, படத்தொகுப்பாளர் அருண் குமார் ஆகியோர் படத்தின் நோக்கத்தையும் அதற்கு இருக்கும் சவால்களையும் உள்வாங்கி பணியாற்றி இருக்கின்றனர். ஒளிப்பதிவாளர், அழகியல் குறித்த என் தேவைகளை நிறைவேற்றியிருகிறார்.

ஒளிப்பதிவு, இசை மற்றும படப்பதிவுக் களங்களில் எந்த சமரசமும் இன்றி வேலை பார்த்திருக்கிறோம். எல்லோருடைய தொலைநோக்கும் ஒரே புள்ளியில் இருந்ததற்கு முக்கியமான காரணம். தயாரிப்பாளரும் நானும் அவ்விடயத்தில் தெளிவாக இருந்தோம். குறிக்கோளும் தொலைநோக்கும் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும்போது,  செய்யும் வேலை கலையாகிவிடுகிறது. மகிழ்ச்சியாக, உற்சாகமாக வேலை பார்த்தோம். என்ன, அதற்குள் படத்தை நிறைவுசெய்து விட்டீர்களா என்று எல்லோரும் வியந்து கேட்கும் படியாக, 30 நாட்களில் திட்டமிட்ட படியே ஆர்ப்பாட்டமின்றி, மிகுந்த கவனத்துடன் வேலையை முடித்தோம்.

இவ்வளவு சிறப்பாக, இந்தப்படத்தை முடித்துக் கொடுத்த என் குழுவிற்கும் தயாரிப்பாளருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். திரைக்கு வரும் நாளை, மக்கள் எல்லோரிடமும் படத்தைக் கொண்டு சேர்க்கும் நாட்களை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம்.

Mala Mam & Kuti Revathi mam photo.jpg

பரத் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம்… கற்றுக்கொண்டது பற்றி.

பரத்பாலாவிடம் 19th Step படத்திற்கு திரைக்கதையாசிரியராகப் பணிக்குச் சேர்ந்தேன். அப்படியே, ‘மரியான்’, படம் ஒரு வரிக்கதையாக இருந்த கணத்திலிருந்தே திரைக்கதையாசிரியராகப் பணியாற்றினேன். படப்பதிவின் போது, க்ளாப் போர்டு கலைஞராக பணியாற்றினேன். ஏஆர்ரஹ்மான் இசையில், ‘நெஞ்சே எழு’, ‘எங்க போன ராசா’, என்ற இரு பாடல்களை எழுதினேன். ஏஆர்ரஹ்மான் தான் இப்பாடல்கள் வழியாக என்னை பாடலாசிரியராக ஆக்கினார். அதே படத்தில் முழுப் படமும் நிறைவாகும் வரை பணியாற்றி இணை இயக்குநர் ஆனேன். தொழில் நுட்ப ரீதியான திரைசார்ந்த எல்லா விடயங்களையும் அறிந்து கொண்டேன்.  ஒரு படத்தின் கதை கருவாக இருந்ததிலிருந்தே பணியாற்றியதால் அது முழு வடிவம் பெறுவதை காண்பதே கற்றலுக்கான அடிப்படை. சமூகத்தின் மையமான கலையாயும் தொழில்துறையாகும் சினிமா வளர்ந்து வருவதை அதன் பிரமாண்ட அளவில் கற்றுக்கொள்ள ஏஆர்ரஹ்மான், பரத் பாலாவைக் காட்டிலும் வேறு யார் சிறந்த களங்களைக் கொடுக்க முடியும்.

64232486_2865368190204574_7791363157921890304_n.jpeg

புதிதாக பல திறமைகளுடன் சினிமாவிற்குள் சாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு நுழைகின்றனர். அவ்வாறான புதுதிறமைகள் அவர்களை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.?

திரைத்துறை, பல் துறை கலைகளின் திறமைகளைக் கோரும் ஓர் ஊடகம். அதே சமயம், தம்மிடம் உள்ள திறமைகளை நவீனப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். சமூகத்தின் குறுக்கும் வெட்டுமாய் ஊடாடும் ஒரு துறையில் தாம் பங்கெடுக்கிறோம் என்ற அக உணர்வும் புறச் செயலாட்டுணர்வும் கொண்டிருக்கவேண்டும். இலக்கியம் முதல் எல்லா கலைகள் குறித்தும் சிறந்த பார்வைகள் பெறுவதற்கான பயிற்சியைக்  கொண்டிருக்க வேண்டும். 24 கலை வகைகள் திரைத்துறையில் பங்கெடுக்கின்றன என்று சொல்கிறார்கள். எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பதன் வழியாக, திரைத்துறை என்ற ஒன்றில் சிறந்து விளங்க முடியும் என்று நம்புகிறேன்.

கதை சொல்லத் தெரியவேண்டும். கவிதையை ரசிக்கத் தெரியவேண்டும். புகைப்படம் எப்படி எடுக்கவேண்டும் என்று தெரிய வேண்டும். தனியே பயணங்கள் மேற்கொள்ள வேண்டும். சமைக்கத் தெரியவேண்டும். நீண்ட தூரம் ஓட முடிய வேண்டும். மலைகள், காடுகள் ஆறுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கவேண்டும். சமூக நிகழ்வுகளில் பங்குபெற வேண்டும். சிறந்த ஓவியங்கள் எப்படி உருவாகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். திறந்த மனமுடையவராய் வாழத் தெரியவேண்டும். அடிப்படையாக, தான் பிறந்து வந்த பின்னணியிலேயே சிக்கிக் கொண்டிராமல் அவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும் முதலில்.

5E4A0196.jpeg

புதுமுக இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பது கடினமான ஒரு விடயம், உங்களுக்கு எப்படி அமைந்தது.?

உண்மை தான். ‘மரியான்’ படத்தின் இணை இயக்குநர் என்ற நிலையிலிருந்து இயக்குநர் நிலையை எட்டுவது என்பது மிகவும் நீண்ட நெடிய சவால்கள் நிறைந்த பயணமாக இருந்தது. இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும் என்று நினைக்கிறேன், அது தனித்துவமானதாகவும் இருக்கும் என்றும் நம்புகிறேன். அதுமட்டுமன்றி, தான் யார், என்னவிதமான படத்தை எடுக்க நினைக்கிறோம், தனக்கு இங்கே இருக்கும் சவால்கள் என்ன என எல்லாவற்றையும் அந்தப் பயணத்தில்தான் அறிந்து கொள்ள முடியும். சொல்லப்போனால், அந்தப் பயணத்தையே ரசிப்பவர்களாக நாம் மாறிவிடுவது தான் பயணத்தை உவகை நிறைந்ததாக, ஆக்கப்பூர்வமானதாக ஆக்கும்.  வெயில், மழை, இரவு, தொலைவு என்று பாராமல் தயாரிப்பாளர்களைத் தொடர்ந்து சென்று சந்தித்திருக்கிறேன். திரைக்கதையை விரிவாகச் சொல்லியிருக்கிறேன். பல வடிவங்களை அலுப்புறாமல் எழுதி எடுத்திருக்கிறேன். தயாரிப்பாளரை உங்கள் கதைக்கு இணங்கச் செய்தலும் ஒரு கலையே.  எது உங்கள் தனித்துவமான திறன் என்று நீங்கள் அறிந்துவிட்டால், மற்றதெல்லாம் எளிதே. திரைத்துறையில் வாய்ப்பு தேடும் எந்த ஒருவரின் பயணத்தையும் விட என்னுடையது நீளமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அவற்றினூடே நிகழ்ந்த அனுபவங்களின் பால், நான் என்ன திரைப்படம் எடுக்கப் போகிறேன் என்பதையும்  தொடர்ந்து கற்றுக்கொண்டே  தான் இருந்தேன்.

மேலும், இந்தப்பயணம் எந்த இரண்டு இயக்குநருக்கும் ஒன்று போல் இருந்துவிடாது. இந்த அனுபவம் எல்லோருக்கும் பொதுவானது அன்று.

W6plspzHQmqg8NBRoF04Xw_thumb_81eb.jpg

பெண் இயக்குனராக எதிர்நோக்கும் சவால்கள் என எவ்வாறான விடயங்களை பார்க்கிறீர்கள்?

என்றுமே என்னை ஒரு பெண் இயக்குநராக நான் உணர்வதில்லை, முன் வைப்பதில்லை. அப்படியாக, நம்மை ஒரு பெண்ணாக முன் வைத்தால் தான் எல்லோரும் அப்படியே நம்மைப் பார்ப்பார்கள். பெண்களைத் தம்மில் ஒரு பகுதியாகப் பார்க்கும் சமூக அறிவைச் சமூகம் கொண்டிராதவரை, இது குறித்துப் பெண் இயக்குநர்கள் தெளிவாக இருக்கவேண்டும். நான் அம்மாதிரியான முகத்தை அணிந்து கொள்வதே இல்லை. யாரிடமும், ஏன் என் படத்தில் வேலை பார்க்கும் பிற பெண் கலைஞர்களிடம் கூட நான் அதை எதிர்நோக்கி, கோருவதில்லை. திரைத்துறையைப் பொறுத்தவரை, எவர் வெளிப்படுத்தும் திறமை தான் முன்னிற்கும். பெண், ஆண் என்பதற்கு இடமேயில்லை. ஆனால், வணிக, மையச் சமூகத்தில் இந்தப் பேதத்தை தொடர்த் திட்டங்கள் மூலம் ஓரம் கட்ட முடியும். ஒரு பேரமாக்க முடியும். என்றாலும், ஓரளவிற்கு மேல் திறமையை எவரும் புறக்கணிக்கவே முடியாது. இது, சமூகத்தில், வரலாற்றில் முன்பே பல முறை நிகழ்ந்திருக்கிறது.

BTSTfYQ4QtGioI7EjE5Xqg_thumb_81e9.jpg

அநேகமான புதிய இயக்குனர்களின் மத்தியில் நீங்கள் உங்களை தக்கவைத்துக் கொள்ள முடியும் என நினைக்கிறீர்களா?

இம்மாதிரியான சந்தேகங்களுக்கு எல்லாம் நான் இடம் கொடுப்பதே இல்லை, ரோஷன். என்னில் இவையெல்லாம் தோன்றியதே இல்லை. மேலும், சினிமா என்பது ஓர் இயக்குநரோடு இன்னோர் இயக்குநர் போட்டி போடுவது என்பதாகாது. அந்த இயக்குநரின் முந்தைய படைப்புடன் அவரே போடும் போட்டியாகத்தான்சினிமா இருந்திருக்கிறது. முந்தைய படைப்பினும் சிறந்த படைப்பைக் கொடுக்கவே ஒவ்வோர் இயக்குநரும் உழைக்கின்றார். என்னைப் பொறுத்தவரை, சினிமா அதையும் மீறியது.  தொடர் கலை வெளிப்பாடு.

தற்போது வெளிவரும் திரைப்படங்களில் இல்லாத ஒரு தனித்துவ தன்மையை உங்களின் திரைப்படங்களில் காணமுடியும் என்றால் அது என்ன? தமிழ் திரையுலகில் திரைப்படத்தின் தரத்தினை  “பட்ஜெட்’ தீர்மானிக்கின்றதா?

GUC2HYCQSsKDPxyKCnOhwg_thumb_81e8.jpg

வழமையான படங்களுக்கு எதிரான முற்றிலும் புதிய திசையைத் தொட முடியுமா என்று பார்த்திருக்கிறோம்.  வணிக சினிமாவிற்கான புதிய இலக்கணங்களை முன்மொழிந்திருக்கிறோம்.  ஓர் எளிமையான வடிவமாக சினிமாவை உள்வாங்கியிருக்கிறோம் என்பதே தனித்தன்மை என்று நினைக்கிறேன். சிறிய படம் என்பதால் இவற்றை பரீட்சித்துப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

‘சிறகு’, அனுபவத்தைப் பொறுத்தவரை  திரைப்படத்தின் தரத்தினை பட்ஜெட் தீர்மானிக்கமுடியாது என்பதைக் கற்றுக்கொண்டேன். அதுபோலவே, நம் நோக்கத்தையும் எந்தக் கட்டுப்பாடும், எல்லையும் தீர்மானிக்க முடியாது. ஓர் இயக்குநரின் ஆளுமையைப் பொறுத்து தான் எல்லாமே தீர்மானமாகும்.

iFu8hD7iSSyjBk1u5MYhxQ_thumb_81e5.jpg

சினிமா நுட்பங்களை எப்படி கற்றுக்கொண்டீர்கள்?

நான் யாருடன் எல்லாம் வேலை பார்த்தேனோ, எல்லோருமே மிகச் சிறந்த திரைக்கலைஞர்கள். ஏ.ஆர்.ரஹ்மான், பரத்பாலா, ‘மரியான்’, படத்தின் ஒளிப்பதிவாளர் மார்க் கொனின்க்ஸ், ‘சிறகு’, படத்தின் தயாரிப்பாளர் மாலா மணியன், எடிட்டர் லெனின் என எல்லோருமே பரந்த தொழில்நுட்ப அறிவையும் கலையையும் ஒருங்கே செயல்படுத்தும் வல்லுநர்கள். ‘மரியான்’ படத்தின் அத்தனை திரைக்கதை வடிவங்களையும் நானே எழுதி எடுத்தேன். அப்படத்தின் போது, Post Production பணி முழுவதையும் நானே முன்னின்று செய்ததன் வழியாக எல்லாவற்றையும் குறிப்பாக, கலை நுட்பங்களை , திரைத்துறைக்குத் தேவையான தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டேன். மரியானில், ஏஆர்ரஹ்மானின் முழுப் பின்னணி இசைப்பதிவையும் கண்ணுற்றேன்.  வேறென்ன வேண்டும் எனக்கு? அற்புதமான பருவ காலங்கள், இவை. கலையைச் செய்வதன் வழியாகக் கற்றுக்கொள்வதும், தன் திறனைச் செழுமையாக்கிக் கொள்வதும் சினிமாவில் அன்றாடப் பணி.

நீங்கள் ஒரு பல்துறைக் கலைஞரும் கூட. அந்தவகையில் உங்களுடைய பாடலாசிரியர் துறை அனுபவம் பற்றி…

நான் ஏற்கெனவே சொன்னது போல, ஏஆர்ரஹ்மான் தான் என்னை பாடலாசிரியர் ஆக்கினார். என் கவனம் எல்லாம் திரை இயக்கத்தில் தான் இருந்தது. என்றாலும் கவிஞராய் இருந்த படியால், பாடலாசிரியர் ஆவதில் சிரமம் இல்லை. இயக்குநர்கள் அஸ்வின் சரவணன் (மாயா, கேம் ஆன்), ஶ்ரீ கணேஷ் (எட்டு தோட்டாக்கள்), அருண் பிரபு புருஷோத்தமன் (அருவி, வாழ்) என்று  தொடர்ந்து இளம் இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.  தற்கால சினிமாவின் மையமான அங்கமாக இருக்கும் இவர்களின் கோரிக்கை துல்லியமானது, சவாலானது. உத்வேகம் நிறைந்தது. மகிழ்ச்சியான இந்தப் படைப்பாக்கப் பணியில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். ஒவ்வொரு பாடலின் பின்பும், என் முழுமையான ஈடுபாட்டின், வெளிப்பாட்டின் இன்பத்தை நுகர்கிறேன். ‘சிறகு’, படத்தில் எல்லா பாடல்களையும் எழுதி இருக்கிறேன். இசை அமைப்பாளர் அரோல் கொரேலி, மிகுந்த திறமைசாலி, நான் எழுதிய வரிகளுக்கு இசையமைத்துப் பாடல்கள் ஆக்கியிருக்கிறார். ஏஆர்ரஹ்மானின், Mom படத்திலும் 99 Songs படத்திலும் பாடல் எழுதியிருக்கிறேன்.

இயக்குநரை திருப்திப்படுத்த வேண்டும். இசையமைப்புக்கு ஏற்ற வகையிலான பாடல் வரிகளை வழங்க வேன்டும் . இயர்க்குநருக்கும் இசையமைப்பாளருக்கு இடையில் ஒரு பாடலாசிரியரின் பங்களிப்பு எப்படி இருக்கிறது ?

தமிழ்ச்சமூகம், இசையை மையமாகக் கொண்டது. இரண்டாயிரம் வருடத் தமிழ் இசை மரபின் எச்சமும் தொடர்ச்சியுமாகத் தான் திரை இசை இருக்கிறது. தமிழ் இசை குறித்து ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் இசையமைப்பாளர் ஏஆர்ரஹ்மான் பவுண்டேஷனில் தமிழ் இசைத்தளத்தை நடத்தி வருகிறேன். இதற்கான ஆய்வில பல இசை மேதைகள் தம் இசையின் வழியாக, தமிழ் இசையின் வித்துகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர் என்பதை அறிந்து கொண்டேன். தமிழ் இசையின் ஒரு கிளையாக திரை இசை வளர்ந்து எழுந்திருக்கின்றது.  இன்றைய திரை இசையின் சவால்களைத் தானும் ஏற்று அதை ஈடுசெய்யும் இடத்தில் பாடலாசிரியர் இருக்கிறார். சவாலான, இடம். மொழி, இசை, திரைத்துறை, கருப்பொருள் என்று எல்லாவற்றையும் தன் வழியாக இணைக்கும் பொறுப்பு மிக்க இடம். பாடலாசிரியர் என்பது எளிதான பொறுப்பு இல்லை.

ஒரு சாதரண கவிஞருக்கும் சினிமா பாடலாசிரியருக்கும் இடையிலான வேறுபாடுகள் எவை?

ஒரு சாதாரண கவிஞர் என்பது தவறான வார்த்தை.  கவிஞருக்கும் பாடலாசிரியருக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.  இருவருமே வேறு வேறு நபர்கள். வேறு வேறு திறமைகளை முன் வைப்பவர்கள். மொழி, கவித்துவம் என்பவை மட்டுமே பொதுவானவை. மற்ற வகையில், இசையின் எல்லையையும் லயத்தையும் உணர்ந்து அவற்றின் எல்லைகளுக்குள் சொற்களைக் கையாளும் சாகசத்தைக் கோருவது, பாடலாசிரியர் வித்தை.

இனிவரும் காலங்களில் என்ன வகையான திரைக்கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்?

இயக்குநர் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் அருமையான கதவுகளைத் திறந்து வைத்திருக்கின்றனர். இவர்கள் இப்பொழுது திறந்து வைத்திருக்கும் வெளிகளில் எல்லாம் இவர்களுக்கு முன்னால் பயணிப்பது என்பது நினைத்துப் பார்க்க இயலாத காரியம். சமூகத்தின் இலக்கியம், கவிதை போன்ற வெளிகளில் இத்தகைய கருப்பொருட்களைக் கையாண்டிருந்தாலும் சினிமாவில் இது ஓர் எட்டாக் கனியாகவே இருந்தது. இன்று, சமூக அரசியல் பேசும் கதவுகளை இவர்கள் அகலத் திறந்து வைத்திருக்கின்றனர். அதற்கான களமும், வணிகமும், உலகளாவிய பார்வையும் ஓங்கியிருக்கிறது. உலகெங்கும் வாழ் தமிழர்களுக்குச் சமூக அரசியலையும் சமூக நீதியும் கொண்டு சேர்க்கும் இந்தப் பாதையில் நானும் பயணிப்பேன்.

உதவி இயக்குனராக அனுபவம் பெற்று சினிமாவில் இயக்குனராகும் ஒருதரப்பு மற்றும் தற்போது குறுந்திரைப்டங்கள் மூலம் சினிமாவிற்குள் இயக்குனராகும் ஒரு தரப்பு. இவ்விரு தரப்பினர் மீதான உங்கள் கண்ணோட்டம் என்ன?

இரு தரப்பினரையுமே நான் ஆதரிக்கிறேன், மதிக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், புகழ்மிக்க ஓர் இயக்குநர் சொல்லியிருக்கிறார்: ஒரு திரை இயக்குநராக விரும்பினால் கேமராவை திருடியேனும் படம் எடுங்கள்.  சினிமா என்பது உலக முதலாளித்துவத்தை எதிர்க்கும், விமர்சிக்கும் ஒரு கலை ஆயுதம். இதன் வரலாறு நூறாண்டே எனினும், இதன் அளவிற்கு பல் வகை கலைகளை உள்ளடக்கி ஒட்டுமொத்த ஆயுதமாக்கி உலகைக் கேள்வி கேட்கும் ஒரு வடிவம் இல்லை. பாமரரை அகவயப்படுத்திக் கொள்ளும் தன்மையும் இதற்கு உண்டு. உயர் தொழில்நுட்பத்தைக் கலை ஆக்கும் வலிமையும் உண்டு.

தற்போதைய காலக்கட்டத்தில் எந்தவகையான திரைப்படங்கள் சமூகத்திற்க அவசியம் என உணர்கின்றீர்கள்?

சினிமா, சமூக அரசியல் பேச வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன். இதுவே, உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழர்களை அறிவு ரீதியாக, உணர்வு ரீதியாக, கலை ரீதியாக இணைக்கும் செயல்பாடாக இருக்கும் என்றும் நம்புகிறேன். நம் கதை சொல்லல் முறை, படைப்பாக்க முறை என்பவை பல அடுக்குகள் கதை வெளிகளைக் கொண்டது. இந்தப் பல அடுக்குகள் நம் நீண்ட வரலாற்றின் சமூக அரசியலின் மொழி அடர்த்தியின் ஊடாட்டங்கள் வழியே எழுந்து வருவது. ஒற்றை வரிக் கதையால் நாம் நிறைவு கொள்ள முடியாமல், இன்னும் இன்னும் ஒரு கதையின், கதை மாந்தர்களின், கதை நிலங்களின் பின்னணி தேடிச் செல்லும் வேட்கை நிறைந்த மரபு தமிழர்களுடையது என்பதால் சமூக அரசியலைப் பேசாமல் நம்மால் ஒரு கலை வெளிப்பாட்டில் முழுமையைத் தொடமுடியாத. அத்தகைய படங்களே நம் தாகவிடாயைத் தீர்க்கும்.

fLpE9NHkSjG%D9Y6n11ZyA_thumb_81ed.jpg

இலங்கை வந்திருக்கிறீர்களா? இலங்கை மக்களுக்கு சொல்ல விரும்புவது?

ஈழத்திற்கு வந்திருக்கிறேன். இரண்டு முறைகள். செல்வி திருச்சந்திரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பெண்ணியக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அழைப்பை ஏற்று ஒரு முறை.  இன்னொரு சமயம் என் நண்பர் ஆர்ஆர் சீனிவாசனுடன் முழு ஈழமும் ஒரு மாதத்திற்கும் மேல் பயணம் செய்திருக்கிறேன். சுனாமிக்கு ஒரு மாதத்திற்கு முன். அதன் முழு இயற்கை அழகையும் வனப்பையும் சொல்லொணா காட்சி நலனையும் கண்டு களித்திருக்கிறேன். இன்று இலக்கியத்தின் முன்னோடியாக நான் முன் வைக்கும், கவிஞன் பிரமிள் தோன்றிய புவியிடம் அது என்றவகையிலும் அதன் மீது என் பிடிப்பு ஆழமானது. ஈழ இனப்படுகொலைக்குப் பின்பு நான் இன்னும் அங்கு செல்லவில்லை. அங்கிருந்து உலகெங்கும் தூக்கியெறியப்பட்ட தமிழர்கள் பால் என் அன்பு கடல் அளவினது. இன்று எது படைத்தாலும், கவிதையாகட்டும் சினிமாவாகட்டும், இலக்கியமாகட்டும் எல்லோருக்குமானதாக மாற்றிவிட்டது அந்த இனப்படுகொலை.  உலகெங்கும் சிதறிக்கிடக்கும் ஈழக்கவிஞர்களின் கவிதைகளால் ஆன ’முள்ளிவாய்க்காலுக்குப்பின்’, என்றொரு கவிதைத் தொகுப்பைத் தொகுப்பதில் ஈடுபட்டேன். ‘யானுமிட்ட தீ’, என்ற என் கவிதைகளால் ஆன ஒரு தொகுதியையும் கொண்டு வந்தேன். தமிழகத்தின் தொல் நிலமானது, ஈழம்.

நான் என்ன அந்த மக்களுக்குச் சொல்வது? அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள், தம் ஒவ்வொரு செயல்பாட்டின் வழியாகவும் என்று புலன்களைக் கூர்மையாக்கிக் காத்திருக்கிறேன். தமிழ் மொழி, தமிழ் மருத்துவம், நாட்டார் கலைகள் எல்லாவற்றின் திடமான வேர்களையும் கொண்டது அந்த நல் நிலம்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More