இலங்கை கிரிக்கட்டின் தொழில்நுட்ப ஆலோசணைக்குழுவின் தலைவரான அரவிந்த டி சில்வா, தங்களுடைய குழுவின் நோக்கங்கள் பற்றியும் நாட்டில் கிரிக்கட்டை மேம்படுத்த வைத்துள்ள திட்டங்கள் பற்றியும் அண்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
அந்த செவ்வியின் தமிழாக்கம்.
இலங்கை கிரிக்கெட்டுக்கு சேவை செய்வதற்காக மீண்டும் இந்த தொழில்நுட்பக்குழுவில் இணைய வேண்டும் என்ற தீர்மானத்தை நீங்கள் எடுப்பதற்கு காரணம் என்ன?
எனக்கு எப்போதும் சவால்களை முகம்கொடுப்பதில் ஆர்வமுண்டு. இதற்கு முன்னரும் நான் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையில் பல குழுக்களில் கடமையாற்றியுள்ளேன். ஆனால் இம்முறை இலங்கை அணிக்கு இந்த உதவி மிகவும் அவசியமானதென்று கருதுகிறேன். இப்போது அணியும் வீரர்களும் உள்ள நிலையையும் விளையாட்டின் மேம்பாட்டையும் கருத்திற்கொண்டு நான் இந்தக்குழுவில் இணைய தீர்மானித்தேன். இதனூடாக என்னாலியன்றவற்றை வீரர்களுக்கு செய்ய முடியும் என்று நம்புகிறேன். இப்போது இலங்கை அணியின் நிலையைப் பார்த்த பிறகு எனக்கு ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது. இந்த விளையாட்டை மேம்படுத்த யாரேனும் ஒருவர் நீண்டகாலத்திட்டமொன்றை வகுக்க வேண்டும். விளையாட்டின் அடிமட்டம் வரை சென்று இந்தப்பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேட வேண்டும். அதுவே என்னை இந்த குழுவுக்குள் இணைத்துக்கொள்ள முக்கிய காரணமாகும்.
உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு என்ன?
அடிப்படையில் கிரிக்கெட் சம்மந்தமான சகலவிடையங்களையும் மேற்பார்வை செய்வதே எண்களின் அடிப்படை பொறுப்பு. ஒரு குழுவாக இந்த விளையாட்டிலுள்ள பிரச்சினையான இடங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்வதே எங்கள் நோக்கமாக உள்ளது. அதிலும் விளையாட்டின் அடிப்படை பிரச்சினைகளை சரி செய்து அவற்றினூடாக தேசிய அளவில் கிரிக்கெட்டை வலுப்படுத்துவதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்கவுள்ளோம். பலகாலமாக இங்கே ஒரு கட்டமைப்பை நாங்கள் பேணி வருகிறோம். ஆனால் காலத்திற்கு ஏற்றவாறு நாம் அவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. அதுவே நாங்கள் உலகத்தோடு ஒப்பிடுகையில் பின்தங்கி நிற்க காரணமாகும். ஆகவே இப்போதுள்ள கட்டமைப்பில் செய்யவேண்டிய மாற்றங்களை செய்து இந்தக்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.
உங்கள் குழுவினூடாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் மற்றும் உள்ளூர் கிரிக்கட் யாப்புக்களில் ஏதேனும் மாற்றங்களை செய்ய உத்தேசித்துள்ளீர்களா?
தேசிய மற்றும் உள்ளூர் யாப்புக்கள் தொடர்பில் நாங்கள் சில பரிந்துரைகளை முன்வைக்க எண்ணியுள்ளோம். முக்கியமாக மாகாணங்களுக்கிடையிலான 5 அணிகளைக்கொண்ட ஒரு தொடரை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். இது 2003 ஆம் ஆண்டு நான் சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் என்னால் முன்வைக்கப்பட்ட யோசனையாகும். அப்போதிலிருந்து இதனை நடைமுறைப்படுத்த முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் இன்னும் சாத்தியப்படவில்லை. இதற்கு பலரும் கழகங்களை மையப்படுத்திய கிரிக்கெட்டை பலரும் பாதுகாக்க நினைப்பதும் முக்கிய காரணமாகும். கழகங்கள் ஒவ்வொரு வீரருக்கும் அத்தியாவசியமானவைதான். பாடசாலைக் கிரிக்கெட்டிலிருந்து வெளியே வந்த பிறகு கழகங்கள் வீரர்களுக்கு முக்கியமானவை. ஆனால் கழகங்களை மட்டும் வைத்து எம்மால் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்திவிட்டு முடியாது. போட்டித்தன்மையை அதிகரிக்க எமக்கு இப்படியானதொரு தொடர் அவசியமாகிறது. உதாரணமாக அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் கட்டமைப்பு இவ்வாறே காணப்படுகிறது. பல கலகங்களை இணைத்த மாகாண அணிகள் காணப்படுவதால் அங்கே வலுவான போட்டியும் தரமான வீரர்களும் உருவாகின்றனர். அதே போல இங்கே அநேக கழகங்கள் கொழும்பை மையப்படுத்தியுள்ளன. மாகாண அணிகள் உருவானால் நிச்சயம் நாட்டின் அணைத்து பாகங்களிலிருந்தும் கழகங்கள் உருவாவதோடு வீரர்களும் உருவாவார்கள். அதிகாராமோ பலமோ ஒரு இடத்தில குவிவது தான் இங்கே பிரச்சினை. அதைப்பகிர்ந்தளிக்க நாம் வழிசெய்யவேண்டும். 5 மையங்களை நாடளாவிய ரீதியில் உருவாக்கினால் அவற்றின் மூலம் எம்மால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
இந்த மாகாணங்களுக்கிடையிலான போட்டிக்கட்டமைப்பை உங்களால் சற்று தெளிவு படுத்த முடியுமா?
அடிப்படை எண்ணக்கருவாக இருப்பது, 24 கழகங்களை 5 மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்து. உதாரணமாக குறிப்பிட்ட 4 கழகங்கள் ஒரு மாகாணத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்துக்கொள்வோம். அந்த மாகாணத்திற்கான வீரர்களை தெரிவு செய்வது அந்த நான்கு கழகங்களில் வீரர்களின் பெறுபேறுகளை மையப்படுத்தியதாக அமையும். வேறு கழக வீரர்கள் அந்த அணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள். மேலும் அந்த நான்கு கழகங்களையும் அந்த மாகாணமே மேற்பார்வை செய்ய வேண்டும். இவாறு செய்தால் 25 மாவட்டங்களையும் 5 மாகாணங்களுக்குள் அடக்கி அவற்றுக்கு ஏற்றவாறு கழகங்களை பிரித்து விட்டால் நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் எமக்கு வீரர்கள் கிடைப்பார்கள். முதற்தர போட்டிகள் அனைத்தும் நான்கு நாட்களைக்கொண்டவையாகவும் லிஸ்ட் ஏ போட்டிகள் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது பாணியிலும் நடைபெறும். வீரர்கள் தம்மை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் வகையில் நாம் முதற்தர போட்டிகளின் கட்டமைப்பையும் மறுசீரமைக்க வேண்டியுள்ளது. பல திறமையான வீரர்கள் வேறு நாடுகளில் உள்ளூர் மற்றும் முதற்தர போட்டிகளில் விளையாடுவதற்காக நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். ஒரு அவுஸ்திரேலிய உள்ளூர் வீரர் ஒரு பருவ காலத்திற்கு 10000 அமெரிக்க டொலர்கள் வரையில் உழைக்கிறார். ஆகவே நாங்களும் எங்கள் வீரர்களை தக்க வைக்க குறைந்தது 3 மில்லியன் அமெரிக்க டொலர்களையாவது ஒதுக்க வேண்டியுள்ளது.
பாடசாலைக் கிரிக்கெட்டை மேம்படுத்த உங்கள் திட்டங்கள் என்ன?
எங்கள் நாட்டின் பாடசாலைக்கிரிக்கெட்டை பொறுத்தவரை சுமார் 3 இலட்சம் வீரர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். 13 வயத்துக்குட்பட்டவர்கள் அணியிலிருந்து அதற்கு மேலுள்ள அணைத்து பிரிவுகளிலும் வீரர்களுள்ளனர். ஆனால் 19 வயத்துக்குட்பட்டவர்கள் பிரிவை நோக்கினால் 9000 வீரர்கள் மாத்திரமேயுள்ளனர். இதில் தெளிவான ஒரு வீழ்ச்சியை எம்மால் இனங்காண முடிகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்களில் பலர் கிரிக்கெட்டை தங்கள் எதிர்காலமாக தேர்ந்தெடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே நாங்கள் எப்போது ஒரு திறமையான வீரரை இனங்கண்டவுடன் அந்த வீரரை நாட்டுக்கு விளையாடுவதற்கு தயார் படுத்தவும் அந்த வீரருக்கு கல்வியிலும் விளையாட்டிலும் உதவக்கூடிய வகையில் எங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அவர்கள் படித்துக்கொண்டே கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை நாங்கள் உருவாக்கி கொடுப்பது அத்தியாவசியமானதாகும்.