இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு குருநாகல் மாலிகாபிட்டிய மைதானத்தில் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமான அங்குரார்ப்பண மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஊவா மாகாணம் முதலாவது வெற்றியை ஈட்டியது.
மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்ட ஆரம்ப விழா வைபவத்தில் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, போக்குவரத்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் விசேட விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையிலான போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
மின்னொளியில் நடைபெற்ற ரஜரட்ட அணிக்கு எதிரான போட்டியின் ஆரம்பத்தில் ஊவா மாகாணம் போட்ட கோல் அதன் வெற்றிக்கு வித்திட்டது.
போட்டியின் 8ஆவது நிமிடத்தில் ஊவா வீரர் கவிந்து ரவிஹன்சவை முரணான வகையில் வீழ்த்திய ரஜரட்ட வீரர் அசிக்கூர் ரஹுமான் (தேசிய வீரர்) மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.
இந் நிலையில் வழங்கப்பட்ட 20 யார் ப்றீ கிக்கை முறையாகப் பயன்படுத்திக்கொண்ட பிராஸ் ஸஹீர் பந்தை கோலினுள் புகுத்தி 9ஆவது நிமிடத்தில் ஊவா மாகாணத்தை முன்னிலையில் இட்டார்.
இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தபோது ரஜரட்ட அணிக்கு கிடைத்த சற்று இலகுவான கோல் போடும் வாய்ப்பை என். மல்ஷான் தவறவிட்டார்.
சற்று நேரத்தில் ரஜரட்ட வீரர் லக்மால் வீரசிங்க மிகவும் முரட்டுத்தனமாக விளையாடியதால் மத்தியஸ்தர் நிவொன் ரொபேஷின் நேரடி சிவப்பு அட்டைக்கு இலக்காகி அரங்கை விட்டு வேளியெறினார்.
எனினும் இடைவேளையின் பின்னர் ரஜரட்ட அணி திறமையாக விளையாடி கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்தது. ஆனால், ஊவா மாகாண வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
இன்று 26 ஆம் திகதி புதன்கிழமை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் நிதர்ஷன் தலைமையிலான வட மாகாண அணியை எம். ஷிபான் தலைமையிலான சப்ரகமுவ மாகாண அணி எதிர்த்தாடவுள்ளது.