பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய மெய்வல்லுநர் சம்மேளனத்திற்கான (SAAF) பங்கபந்து ஷெய்க் முஜிப் டாக்கா மரதன் 2023 போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கையின் சுஜானி பியூமிக்கா மதுமாலி பெரேரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தெற்காசிய மெய்வல்லுநர் சம்மேளன நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கான அப் போட்டியில் நேபாளத்தின் புஷ்பா பந்தாரி வெற்றிபெற்று (2 மணி. 48.02 செக்.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இலங்கை வீராங்கனை மதுமாலி பெரேரா 20 செக்கன்கள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று (2:48.22) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இந்தியாவின் அஸ்வினி மதன் ஜாதவ் (2:52.32) வெண்கலப் பதக்கதைப் பெற்றதுடன் இலங்கையின் வத்சலா மதுஷானி ஹேரத் (2:54.20) நான்காம் இடத்தைப் பெற்றார்.
தெற்காசிய மெய்வல்லுநர் சம்மேளனத்திற்கான ஆண்கள் பிரிவில் பங்குபற்றிய இலங்கையர்களில் சிசிர குமார வன்னிநாயக்கவினால் (2:24.48) 5ஆவது இடத்தையே பெற முடிந்தது.
அப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை இந்தியர்கள் வென்றெடுத்தனர்.
பங்ரியா விக்ரம் பாரத் சிங் (2:18.28), அனில் குமார் சிங் (2:20.30), ஷேர் சிங் (2;2035) ஆகிய இந்திய வீரர்களே முதல் 3 இடங்களைப் பெற்றனர். நேபாளத்தின் சந்தோஷ் பிக்ரம் பிஸ்டா (2:24.03) 4ஆம் இடத்தைப் பெற்றார்.