Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலக சம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ்

உலக சம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ்

2 minutes read

மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இருபது 20 உலக சம்பியன் இங்கிலாந்தை 3 – 0 என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி வரலாற்று தொடர் வெற்றியை பங்களாதேஷ் ஈட்டியது.

முதல் இரண்டு போட்டிகளில் ஈட்டிய வெற்றிகளுடன் தொடரை தனதாக்கிக்கொண்டிருந்த பங்களாதேஷ், மிர்பூர் ஷியரே பங்ளா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற கடைசிப் போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நொக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

13 ஓவர்கள் நிறைவின்போது இங்கிலாந்து ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் அவ்வணி வெற்றியீட்டி ஆறுதல் அடையும் என நம்பப்பட்டது.

ஆனால், கிரிக்கெட் விசித்திரமான விளையாட்டு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

14ஆவது ஓவரின் முதல் பந்தில் டேவிட் மாலனும் அடுத்த பந்தில் ஜொஸ் பட்லரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ஓட்ட வேகம் குறைந்ததுடன் விக்கெட்களும் சரளமாக விழத்தொடங்கியது.

டேவிட் மாலன் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க ஜொஸ் பட்லர் 31 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்று ரன் அவுட் ஆனார்.

ஜொஸ் பட்லர் கவர் திசையில் பந்தை அடித்துவிட்டு அவசரமான ஓட்டம் ஒன்றை எடுக்க விளைந்தபோது பந்தை பிடித்த மெஹிதி ஹசன் மிராஸ் நேராக விக்கெட்டை நோக்கி எறிந்து அவரை ரன் அவுட் ஆக்கினார்.

இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்களை இழந்து ஆட்டத்தின் பிடியை தளரவிட்டிருந்தது.

அவர்களைவிட பென் டக்கட் 11 ஓட்டங்களையும் கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தன்விர் இஸ்லாம், ஷக்கிப் அல் ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

லிட்டன் தாஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இரண்டு சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி பங்களாதேஷை பலப்படுத்தியிருந்தார்.

ஆரம்ப விக்கெட்டில் ரொனி தாலுக்தாருடன் 55 ஓட்டங்களைப் பகிர்ந்த லிட்டன் தாஸ், தொடர்ந்து 2ஆவது விக்கெட்டில் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவுடன் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

லிட்டன் தாஸ் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 73 ஓட்டங்களைக் குவித்ததுடன் ரொனி தாலுக்தார் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஆட்டநாயகன்: லிட்டன் தாஸ், தொடர்நாயகன்: நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ.

முதல் இரண்டு போட்டிகள்

இரண்டு அணிகளுக்கும் இடையில் சட்டோக்ராமில் நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் 6 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

அப் போட்டியில் இங்கிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் 18 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்ற வெற்றியீட்டியது.

மிர்பூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 4 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது. அப்போட்டியில் இங்கிலாந்து 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More