ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் மத்திய மேற்குப் பகுதியில் அமைந்துள்ள லேக் காஜெல்லிகோ என்ற நகரில் இன்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியா நேரப்படி மாலை சுமார் 4.40 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில், படுகாயமடைந்த இன்னொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புக் காரணமாக சம்பவ இடத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள பொலிஸார், அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 1,500 பொதுமக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தத் தாக்குதல் பயங்கரவாதச் செயலாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பார்ப்வென் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராய் பட்லர், இது அந்தப் பகுதியை உலுக்கிய மிகக் கொடூரமான சம்பவம் எனக் கூறியுள்ளார்.