செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஸ்டார்மர் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடி தீவிரம் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

ஸ்டார்மர் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடி தீவிரம் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

1 minutes read

இங்கிலாந்து பிரதமரும் தொழிற்கட்சி தலைவருமான சர் கெய்ர் ஸ்டார்மர் தற்போது கடுமையான அரசியல் சவால்களை எதிர்கொண்டு வருகிறார் என்று முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் தெரிவித்துள்ளார். பிபிசி ரேடியோ 4 இன் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர், பீட்டர் மண்டேல்சன் தொடர்பான சர்ச்சையில் சரியான நடவடிக்கைகளை எடுக்க ஸ்டார்மர் தாமதித்ததாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஸ்டார்மர் நேர்மையான அரசியல்வாதி எனவும், மண்டேல்சனால் அவர் ஏமாற்றப்பட்டிருக்கலாம் எனவும் பிரவுன் தெரிவித்தார். அரசியல் அமைப்பில் ஏற்பட்டுள்ள ஊழல் மற்றும் நெறிமுறை குறைபாடுகளை சீர்செய்ய ஸ்டார்மரே பொருத்தமான தலைவர் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு சந்தை உணர்திறன் கொண்ட அரசாங்க தகவல்களை பீட்டர் மண்டேல்சன் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் வெளியாகிய பின்னணியிலேயே இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மண்டேல்சனுடன் தொடர்புடைய இரண்டு வீடுகளில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், அரசியல் அமைப்பை சுத்தப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அது நடைபெறாவிட்டால் நாடு பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கோர்டன் பிரவுன் எச்சரித்துள்ளார். ஸ்டார்மர் சரியான முடிவுகளை எடுக்க விரும்புபவர் என்றும், வரவிருக்கும் மாதங்களில் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அண்மையில் வெளியான எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், இங்கிலாந்தின் பொருளாதார நிலை மற்றும் அரச சொத்துகள் விற்பனை உள்ளிட்ட தகவல்கள் மண்டேல்சன் மூலம் எப்ஸ்டீனுடன் பகிரப்பட்டதாகக் கூறப்படும் மின்னஞ்சல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் €500 பில்லியன் பிணை எடுப்பு அறிவிப்பு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த தகவல் கசிவுகள் நாட்டிற்கு துரோகம் எனக் குறிப்பிட்ட கோர்டன் பிரவுன், இவை நாணய சந்தை மற்றும் வணிக துறையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என தெரிவித்தார். இந்த விவகாரம் தன்னை அதிர்ச்சி, கோபம் மற்றும் ஏமாற்றம் அடையச் செய்ததாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, பொது அலுவலகங்களில் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் தொடர்பாக வில்ட்ஷயர் மற்றும் வடக்கு லண்டனில் உள்ள மண்டேல்சனுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸ் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.