இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின் 9 லட்சம் அகதிகளை மீள்குடியமர்த்தியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
தாய்நாட்டிற்கு வெளியே உள்ள மக்களுக்கான மனிதாபிமான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆஸ்திரேலியா, ஐ.நா.வில் அங்கீகரிக்கப்படும் அகதிகளையும் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் உள்ள உறவினர்களால் பரிந்துரைக்கப்படும் அகதிகளையும் நாட்டுக்குள் அனுமதிக்கிறது.
“அகதிகள் பிரச்னையின் சிக்கலை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வுக் காண ஆஸ்திரேலிய சமூகம் மற்றும் ஐ.நா. அகதிகள் ஆணையம் உள்ளிட்ட சர்வதேச தரப்புடன் இணைந்து ஆஸ்திரேலியா செயலாற்றுகிறது,” என இந்தோனேசியாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இந்தோனேசியாவில் ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிந்துள்ள அகதிகளை ஏற்றுக்கொள்ளும் மனிதாபிமான திட்டம் தொடர்வதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அதே சமயம், அந்த அகதிகள் ஜூலை 1, 2014 முன்னதாக இந்தோனேசியாவில் உள்ள ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்திருக்கிறது.
இந்தியா, இலங்கை, மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சிக்கும் அகதிகள் பெரும்பாலும் இந்தோனேசியா கரையில் ஒதுங்கும் சம்பவங்கள் பல நிகழ்ந்திருக்கின்றன. இதை கருத்தில் கொண்டே, ஆஸ்திரேலியா இந்த முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறப்படுகின்றது.
2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக தஞ்சமடைபவர்களை நாடு கடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.