பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இன்று (வியாழக்கிழமை) பயணமாகியுள்ளார்.
பிரதமரின் குறித்த விஜயம் இந்தியாவுக்கும், இந்த 3 நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும், கூட்டுறவையும் புதிய உயரத்துக்கு எடுத்துச்செல்லும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்ட மோடி, முதலில் பிரான்ஸ் நாட்டுக்கு செல்லவுள்ளார். இதனையடுத்து 23ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், பஹ்ரைன் நாட்டிற்கும் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன் பின்னர் பரிஸ் நகரில் நடைபெறும் G7 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதுடன், அந்நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் ஆகியோருடன் பேச்சுவார்தையிலும் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவுக்கும், பிரான்ஸ்க்கும் இடையே சிறந்த நட்புறவு இருந்து வருகிறது. வலிமையான இராஜாங்க உறவுகள், பொருளாதார கூட்டுறவு போன்றவை இரு தரப்பு நாடுகளின் பரிமாற்றத்தால் ஏற்படும்.
இந்த பயணம் இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர வளர்ச்சி, அமைதி, மேம்பாடு ஆகியவற்றை கொண்டுவரும் நீண்டகால நட்பை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துக்கும் என்று நம்புகிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.